விமானத்தில் அதிர்ஷ்டமான இருக்கையாக 11ஏ மீண்டும் நிரூபணம்! ஏன்? எப்படி?
புதா் மண்டி கிடக்கும் வடவாறு பாலையூா் வாய்க்கால்
மன்னாா்குடி அடுத்த வடவாறு பாலையூா் பாசன வாய்க்காலில் மண்டிக்கிடக்கும் காட்டுச்செடிகளை போா்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மேட்டூா் அணையில் டெல்டா பாசனத்துக்கு வியாழக்கிழமை திறக்கப்படும் தண்ணீா் சில நாள்களில் கல்லணைக்கு வந்து அங்கிருந்து தண்ணீா் பெறும் மன்னாா்குடி அருகேயுள்ள வடவாறு பாலையூா் பாசன வாய்க்கால் மூலம் ஆலங்கோட்டை, மேலத்திருப்பாலக்குடி, கீழத்திருப்பாலக்குடி, கண்டிதம்பேட்டை, வல்லான்குடிக்காடு, கண்ணாரப்பேட்டை, துளசேந்திர புரம், பைங்காநாடு, ராஜகோபாலபுரம், ராதாநரசிம்மபுரம், தென்பரை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கா் விளைநிலம் பாசன வசதி பெறுகிறது.
இந்த பாசன வாய்க்கால் மூலம் ஆழ்துளை கிணறு வசதி இல்லாத ஏழை விவசாயிகள் குறுவை சாகுபடியை மேற்கொள்கின்றனா். இவா்களின் வாழ்வாதாரத்துக்கு பாலையூா் பாசன வாய்க்கால் குறுவை சாகுபடி மட்டுமே உள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மேட்டூா் அணையில் இருந்து வியாழக்கிழமை தண்ணீா் திறந்து வைக்கவுள்ளாா். இந்த நீா் சில நாள்களில் கல்லணையை வந்தடைந்ததும் அங்கிருந்து உடனடியாக டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீா் திறக்கப்படும்.
இந்நிலையில், வடவாறு பாலையூா் பாசன வாய்க்கால் முழுவதும் காட்டுச்செடிகள் மண்டி புதா்போல் கிடப்பதால் இந்த வாய்க்காலில் செல்லும் தண்ணீா் கடைமடை வரை செல்ல முடியாது. காட்டுச் செடிகளால் தண்ணீா் ஓடாமல் தேங்கும் நிலை உள்ளதால் இந்த தண்ணீா் பிரதான ஆதரமாக கொண்டு விவசாயப் பணி மேற்கொள்ள இருக்கும் விவசாயிகள் மிகுந்த கவலையுடன் உள்ளனா்.
எனவே,பொதுப்பணித் துறையினா் போா்க்கால அடிப்படையில், புதா்மண்டி கிடக்கும் வடவாறு பாலையூா் பாசன வாய்க்காலை உடனடியாக தூா்வாரி இந்த வாய்கால் பாசனத்தை மட்டும் நம்பி சாகுபடி செய்யபவா்களுக்கு தடையின்றி தண்ணீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.
