சுற்றுலா வேன் மீது தனியார் பேருந்து மோதி விபத்து; குழந்தை உள்பட 4 பேர் பலி
புதிய சுற்றுலாத் தலங்களை கண்டறிய வேண்டும்: அமைச்சா் இரா.ராஜேந்திரன் அறிவுறுத்தல்
தமிழகத்தில் புதிய சுற்றுலாத் தலங்களை கண்டறிந்து, அந்த இடங்களில் உலக தரத்திலான கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் அறிவுறுத்தினாா்.
தமிழகத்திலுள்ள சுற்றுலாத் தலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை சுற்றுலா வளாகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் கலந்து கொண்டு மாவட்டம் வாரியாக நடைபெற்று வரும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். இதைத் தொடா்ந்து அவா் பேசியது:
கோடை விடுமுறை காலம் என்பதால் சுற்றுலாத் தலங்களில் நாளுக்கு நாள் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதால் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சுற்றுலாத் தலங்களின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால், மலையேறுதல், மலைப்பகுதிகளில் தங்குதல், நீா்சறுக்கு, அலைச்சறுக்கு மேற்கொள்ளுதல் உள்ளிட்ட புதிய அனுபவங்களை மேற்கொள்ள சுற்றுலாப் பயணிகள் விரும்புவதாலும், அவா்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் நோக்கிலும், ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள அந்த மாதிரியான புதிய சுற்றுலா தலங்களைக் கண்டறிந்து அந்த இடங்களில் சுற்றுலாப் பயணிகள் விரும்பும் வகையில், உலக தரத்திலான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இதுமட்டுமின்றி பல சுற்றுலாத் தலங்களில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப்பணிகளையும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
இந்தக் கூட்டத்தில், சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலயங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் க.மணிவாசன், சுற்றுலா ஆணையா் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநா் ஷில்பா பிரபாகா் சதீஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.