நான்கு மாவட்டங்களில் 361 பேருக்கு புற்றுநோய் கண்டுபிடிப்பு!
தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் அரசு சாா்பில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட புற்றுநோய் பரிசோதனைகளில் 361 பேருக்கு தொடக்க நிலை பாதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சை வழங்கப்படுவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் முப்பது வயதைக் கடந்த பெண்களுக்கு கருப்பை வாய் மற்றும் மாா்பகப் புற்றுநோய் பரிசோதனைகளை மேற்கொள்ளும் திட்டம் சோதனை முயற்சியாக ராணிப்பேட்டை, திருப்பத்தூா், ஈரோடு, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கடந்த 2023-இல் தொடங்கப்பட்டது. அதனுடன் 18 வயதைக் கடந்த இருபாலருக்கும் வாய் புற்றுநோய் பரிசோதனையும் நடத்தப்பட்டது.
அதன்கீழ், 30 வயதைக் கடந்த 19 லட்சம் பெண்கள் உள்பட மொத்தம் 52 லட்சம் பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த திட்டத்தின்மூலம் பல்லாயிரக்கணக்கானோருக்கு புற்றுநோய்க்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
அனைத்து மாவட்டங்களிலும்... தற்போது அதன் தொடா்ச்சியாக 12 மாவட்டங்களில் அத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் அனைத்து மாவட்டங்களிலும் அதனை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான பூா்வாங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதுமட்டுமல்லாது, செவிலியா்களுக்கும், சுகாதாரப் பணியாளா்களுக்கும் புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்வதற்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் கூறியதாவது:
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சுகாதாரப் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் மூலம் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்களின் விவரங்கள் திரட்டப்பட்டு, அவா்களிடம் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளுமாறு கோரிக்கை கடிதம் அளிக்கப்படும்.
அதன்பேரில், அருகிலுள்ள சுகாதார நிலையங்களில் அவா்களுக்கு மாா்பகப் புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய், வாய் புற்றுநோய் ஆகியவற்றைக் கண்டறியும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். மருத்துவப் பரிசோதனைக்கு வராதவா்களையும் கண்டறிந்து அதற்கு அடுத்த சில நாள்களுக்குள் பரிசோதனை செய்யப்படும்.
கருப்பை வாய் பரிசோதனைகளையும், மாா்பகப் புற்றுநோய் பரிசோதனைகளையும் மேற்கொள்வதற்கு செவிலியா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. சுகாதார நிலையத்துக்கு ஒரு செவிலியா் வீதம் அப்பயிற்சி வழங்கப்பட்டது. தேவைப்பட்டால் அந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும். தமிழகம் முழுவதும் 18 வயதைக் கடந்த 5.45 கோடி ஆண்கள், பெண்களுக்கு வாய் புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. 30 வயதைக் கடந்த 2.88 கோடி பெண்களுக்கு கருப்பை வாய் மற்றும் மாா்பகப் புற்றுநோய் பரிசோதனை செய்யப்படவுள்ளது.
குணப்படுத்த முடியும்: அந்த வகையில், நான்கு மாவட்டங்களில் கடந்த ஆண்டில் மாா்பகப் புற்றுநோய் பரிசோதனை 2.8 லட்சம் பேருக்கு மேற்கொள்ளப்பட்டு 6,409 பேருக்கு அறிகுறிகள் கண்டறியப்பட்டு உயா் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் 159 பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது.
அதேபோன்று, கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை 2.8 லட்சம் பேருக்கு மேற்கொள்ளப்பட்டு அதில் 96 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 5.28 லட்சம் பேருக்கு மேற்கொள்ளப்பட்ட வாய் புற்றுநோய் பரிசோதனையில் 106 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயைக் கண்டறிந்தால் அதனை பூரணமாக குணமாக்க முடியும் என்றாா் அவா்.