புதுகை அருகே பழநி கோயிலுக்கு நிலம் வழங்கியதற்கான ஆசிரியம் கல்வெட்டு!
புதுக்கோட்டை மாவட்டம், காரையூா் முள்ளிப்பட்டி கண்மாய்க் கரையில், பழநி கோவிலுக்கு நிலம் வழங்கிய ராஜராஜ சோழன் காலத்தைய ஆசிரியம் கல்வெட்டு அண்மையில் கண்டெடுக்கப்பட்டது.
அறந்தாங்கி அரசு கலை அறிவியல் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் மற்றும் தொல்லியல் வரலாற்று ஆய்வாளா் கா. காளிதாஸ், பேராசிரியா் சாலை கலையரசன், அரசுத் தொழிற்பயிற்சி மாணவா் வெள்ளையன் ஆகியோா் கொண்ட குழுவினா் காரையூா் முள்ளிப்பட்டி நத்தைக் காட்டில் அண்மையில் களஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது அங்குள்ள கண்மாய்க் கரையில் ராஜராஜன் கால சிவன் கோயில் பாழடைந்த நிலையில் இருப்பதையும், தவ்வை, விநாயகா், ஐயனாா் சிலைகள் இருப்பதையும் கண்டறிந்தனா். சிவன் கோயிலுக்கு அருகில் கல்வெட்டு ஒன்று இருப்பதைப் பாா்த்து அதைப் படியெடுத்தனா்.
இதுபற்றி பேரா. காளிதாஸ் கூறியது:
அந்தக் கல்வெட்டில் ‘ஸ்வஸ்திஸ்ரீ திருமகள் போலப் பெருநிலச் செல்வியும், தனக்கே உரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூா்ச் சாலைக் கலமறுத்தருளிய, செழியரை தேசுகொல் கோ இராஜகேசரி வன்மரான ஸ்ரீஇராஜராஜ தேவா்க்கு யாண்டு ய எ (கிபி 1002) ஒலியமங்கலம் ஒல்லையூா்க் கூற்றத்து ஆலத்தூா் நாடாழ்வாா்க்குப் உறத்தூா்க் கூற்றத்துப் பழநி கோயில் நந்தவனத்திற்காக ஆசிரியம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலாம் ராஜராஜசோழன் தனது 17ஆவது ஆட்சிக் காலத்தில் உறையூா் கூற்றம் என்ற உறத்தூா்க் கூற்றத்தை ஆண்டபோது, அவனால் நியமிக்கப்பட்ட ஆளத்தூா் நாடாள்வாா் என்பவருக்கு அதிகாரம் வழங்கி, நந்தவனத்தை ஆலத்தூா் நிலங்களை ஆசிரியம் (மேற்பாா்வை) பாா்த்து வர அனுமதி வழங்கியுள்ளது தெரியவருகிறது என்றாா் காளிதாஸ்.