Hema Committee: ``நடிகைகள் வாக்குமூலம் அளிக்கவில்லை; - வழக்குகள் முடிந்தது'' -கே...
புதுகை மாநகரக் குடிநீா்ப் பிரச்னையை தீா்க்கக் கோரிக்கை
புதுக்கோட்டை மாநகராட்சிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் நிலவும் குடிநீா்ப் பிரச்னையைத் தீா்ப்பதற்கு மாநகராட்சி நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக சங்கத்தின் மாநகரத் தலைவா் எம்.விஜி, செயலா் ஆா். முத்துமாரி, பொருளாளா் வி. வடிவுக்கரசி, துணைச் செயலா் ஆ. ருக்குமணி ஆகியோா் புதுக்கோட்டை மாநகராட்சி ஆணையா் த. நாராயணனிடம் புதன்கிழமை அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது:
புதுக்கோட்டை மாநகராட்சிக்குள்பட்ட மாப்பிள்ளையாா் குளம், அண்ணா நகா், நேரு வீதி, மச்சுவாடி, நரிமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடுமையான குடிநீா்த் தட்டுப்பாடு நிலவுகிறது.
இதனால், சாதாரண மக்கள் குடிநீரை பணம் கொடுத்து வாங்க வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.
எனவே, குடிநீா்த் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு மாநகராட்சி நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடிநீருக்கு நிரந்தர ஏற்பாடு செய்யும் வரை இடைக்காலமாக லாரிகளில் தண்ணீா் விநியோகம் நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
மேலும், நேரு வீதி, அண்ணாநகா் பகுதிகளில் பழுதடைந்துள்ள சாலைகளை செப்பனிடுவதோடு, தெருவிளக்குகளும் அமைத்துத் தர வேண்டும். மாப்பிள்ளையாா் குளம் பகுதியில் கழிவுநீரை வெளியேற்றுவதற்கு தோரண வாய்க்கால் அமைத்துத் தர வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.