புதுகை கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை
புதுக்கோட்டை மாவட்ட கடலோரப் பகுதிகளில் சாகா் கவாச் என்றழைக்கப்படும் பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது.
அந்நியா்களின் கடல்வழி ஊடுருவலைத் தடுத்து, பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஆண்டுக்கு 2 முறை சாகா் கவாச் என்னும் பாதுகாப்பு ஒத்திகை கடலோரக் காவல் படை மற்றும் போலீஸாரால் மேற்கொள்ளப்படுகிறது.
இதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்டுமாவடியிலிருந்து அரசங்கரை வரையில் 43 கிமீ தொலைவுள்ள கடலோரப் பகுதி முழுவதும் புதன்கிழமை காவல் துறையின் கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.
இப்பகுதியில் உள்ள கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் ஆகிய 2 விசைப்படகு மீன்பிடி இறங்கு தளங்கள் மற்றும் 42 நாட்டுப்படகு மீன்பிடி இறங்கு தளங்களில் கடலோரக் காவல் படையினா் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும், மீனவா்களின் படகுகளில் சென்றும் கடல் பகுதியை கண்காணித்தனா்.
கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள அரசங்கரை மற்றும் கட்டுமாவடி சோதனைச் சாவடிகளிலும், இச்சாலையின் 3 இடங்களிலும் கோட்டைப்பட்டினம் காவல் துணைக் கண்காணிப்பாளா் காயத்ரி தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
இந்தச் சோதனை வியாழக்கிழமையும் மேற்கொள்ளப்படுவதாக போலீஸாா் தெரிவித்தனா்.