புதுச்சேரி: பிறந்த நாள் மது விருந்தில் தகராறு - மாணவரை `ரெஸ்டோ' பார் ஊழியர் கொலை செய்த பின்னணி
சென்னை தனியார் கல்லூரி ஒன்றில் முதுநிலை மூன்றாம் ஆண்டு படிக்கும் மதுரை மேலூரைச் சேர்ந்த ஷாஜன் என்பவர், தன்னுடைய பிறந்த நாளை புதுச்சேரியில் மது விருந்துடன் கொண்டாட முடிவெடுத்திருக்கிறார். அதற்கான தன்னுடன் பள்ளி மற்றும் இளநிலைக் கல்லூரியில் படித்த தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட நண்பர்களை புதுச்சேரிக்கு அழைத்திருக்கிறார் ஷாஜன். அதையடுத்து புதுச்சேரிக்கு வந்த அவர்களுடன், நேற்று நள்ளிரவு சுமார் 11:30 மணியளவில் புதுச்சேரி மிஷின் வீதியில் உள்ள நடனத்துடன் கூடிய OMG (Oh My Gulp) என்ற ரெஸ்டோ பாரில் மது அருந்தியிருக்கிறார்.

அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதையடுத்து அங்கிருந்த மற்ற வாடிக்கையாளர்கள், ஷாஜன் தரப்பினரை வெளியேற்றுமாறு நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். இதனால் அங்கிருந்த பவுன்சர்களும், ஊழியர்களும் அவர்களை பாரில் இருந்து சுமார் 12:30 மணியளவில் வெளியேற்றி உள்ளனர். அதில் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் தங்களை ஏன் வெளியேற்றினீர்கள் என பவுன்சர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
அந்த வாக்குவாதம் ஒருகட்டத்தில் மோதலாக மாறியது. அதில் கோபமடைந்த பார் ஊழியர் அசோக்ராஜ், சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து ஷாஜனின் நண்பரான சண்முகப் பிரியனை குத்தியிருக்கிறார். அப்போது தடுக்க வந்த ஷாஜனையும் அதே கத்தியால் குத்தினார். அதில் இருவரும் சம்பவ இடத்திலயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்திருக்கின்றனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பெரிய கடை போலீஸார், ரத்த வெள்ளத்தில் இருந்த இருவரையும் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் சண்முகப் பிரியன் இறந்துவிட்டதாகக் கூறி, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஷாஜனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். அதைத் தொடர்ந்து கொலை செய்த அசோக்ராஜ் உள்ளிட்ட ஊழியர்கள், பவுன்சர்கள் உள்ளிட்ட 8 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரெஸ்டோ பார்கள் இரவு 12 மணியுடன் மூட வேண்டும் என்ற உத்தரவை மீறி, விடிய விடிய நடனத்துடன் நடத்துவதுதான் இப்படியான சம்பவங்களுக்கு காரணம் என குற்றம் சுமத்துகின்றனர் புதுச்சேரி மக்கள்.