புதுச்சேரி: விடிய விடிய போதை நடனம்… அத்துமீறும் `ரெஸ்டோ’ பார்கள்… அமைதி காக்கும் காவல், கலால் துறை
கரன்சிகளால் காற்றில் பறக்கவிடப்படும் விதிகள்
சுற்றுலா மாநிலமான புதுச்சேரி, தன்னுடைய வருவாய்க்காக பெரிதும் நம்பியிருப்பது கலால் வரியைத்தான். அதனால்தான் மது மீதான மாநில அரசின் வரியைக் குறைத்து அண்டை மாநில சுற்றுலாப் பயணிகளை குறி வைக்கிறது புதுச்சேரி.
அதனால் வார இறுதி நாட்களில் தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் மதுப் பிரியர்களின் வருகையால் புதுச்சேரி ஸ்தம்பித்து விடும்.
இந்த நிலையில் கடந்த 2021-ல் பா.ஜ.க கூட்டணியுடன் ஆட்சிக்கு வந்த முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அரசு, `பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப மதுக்கடைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்’ என்று கூறி, சொற்பக் கட்டணத்தில் ரெஸ்டோ பார்களுக்கான லைசென்ஸ்களை வாரி இறைத்தது.

ரெஸ்டோ பார்களுக்கென்று நிர்ணயிக்கப்பட்ட விதிகள் (!?) காற்றில் பறக்க விடப்பட்டதால், பெட்டிக்கடை வைத்திருந்தவர்கள் கூட ரெஸ்டோ பார்களை திறந்தார்கள். அரசியல் பிண்ணனி கொண்டவர்கள், கந்து வட்டிக்கு விடுபவர்களும் இந்த ரெஸ்டோ பார் ரேஸில் களமிறங்கியதால், குடியிருப்புப் பகுதிகள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் 10 அடிக்கு ஒரு ரெஸ்டோ பார்கள் முளைத்தன.
புதுச்சேரியில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட பெண்கள் படித்து வரும், மிக பழைமையான பாரதிதாசன் மகளிர் கல்லூரிக்கு அருகில் அமைந்திருக்கும் ரெஸ்டோ பார் இதற்கு உடனடி உதாரணம். இரவு 12.30 மணி வரைதான் ரெஸ்டோ பார்கள் இயங்க வேண்டும் என்பதுதான் விதி.
ஆனால் எந்தவித நேரக் கட்டுப்பாடும் இல்லாததால் தமிழகத்தைத் தாண்டி, ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்களால் விடிய விடிய நிரம்பி வழிகின்றன ரெஸ்டோ பார்கள்.
குப்பையுடன் குப்பையாக `சுத்தம்’ செய்யப்படும் குற்றங்கள்
`ரெஸ்டோ பார்களில் இரவு முழுவதும் எழுப்பப்படும் ஒலிகளால் எங்களால் தூங்க முடியவில்லை’ என்ற குடியிருப்புவாசிகளின் குற்றச்சாட்டுகளை, ரெஸ்டோ பார்கள் தரும் கரன்சிக் கட்டுகளால் கலால்துறையும், காவல்துறையும் துளியும் கண்டுகொள்வதில்லை.
இரவில் மது போதையில் அரங்கேறும் குற்றங்கள், வாரியிறைக்கப்படும் கரன்சிக் கட்டுகளின் அடர்த்தியால் அப்படியே அமுங்கி விடுகின்றன. ஒருசில ஆண்டுகளுக்கு முன்பு நகரப் பகுதியில் நள்ளிரவில் போதைக் கும்பல் ஏற்படுத்திய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததும், பிரதான வர்த்தக வீதியான நேரு வீதியில் ஒரு கடைக்குள் கார் நுழைந்ததும் இவற்றிற்கான உதாரணங்கள்.
இரவில் நடக்கும் இந்த விபரீதங்கள், பொதுமக்களின் பார்வைக்கு வராமல் குப்பையோடு குப்பையாக `சுத்தம்’ செய்யப்பட்டு விடும்.

இப்படியான ரெஸ்டோ பார்கள் இளம்பெண்களுடன் செல்பவர்களை மட்டுமே அனுமதிக்கிறது. இதில் சில ரெஸ்டோ பார்கள் பெண்களுக்கு மட்டும் சிறப்பு சலுகையாக மதுவை இலவசமாகவும் வழங்குகிறது. பெண்களுடன் செல்லாத இளைஞர்கள் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை.
இதனால் அவ்வப்போது ரெஸ்டோ பார்களின் வாசலில் ஏற்படும் தகராறுகள், பிரதான வீதிகளில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும்.
இப்படியான ரெஸ்டோ பார்களில் குவிக்கப்பட்டிருக்கும் பவுன்சர்களுக்கு எந்தவித கட்டுப்பாடுகளோ, விதிமுறைகளோ (Standard Operating Procedure) இல்லை. ஜிம்முக்குப் போய் உடலை ஏற்றி வைத்திருந்தால் இப்படியான ரெஸ்டோ பார்கள் அவர்களை பவுன்சர்களாகவும், ஊழியர்களாகவும் அங்கீகரித்து வாசலில் நிற்க வைத்து விடுகின்றன.
பவுன்சர்கள், ஊழியர்கள் பெயரில் ரௌடிகள்
இந்த பவுன்சர்கள் பெயரில் ரௌடிகளும் நுழைந்துவிடுவதால், ரெஸ்டோ பார்களில் மது அருந்த வருபவர்கள் அடிக்கடி தாக்குதலுக்குள்ளாவதும் வாடிக்கைதான். ரெஸ்டோ பார்களுக்கு வருபவர்கள் பெரும்பாலும் அயல் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், புகார் கொடுக்காத அளவுக்கு மிரட்டி அனுப்பப்பட்டு விடுவார்கள்.
பாதுகாப்புக்காக பணியமர்த்தப்படும் இப்படியான முறையற்ற பவுன்சர்களுக்கு, மது போதையில் இருப்பவர்களை உளவியல் ரீதியில் கையாளும் பக்குவம் இருப்பதில்லை. அதன் வெளிப்பாடுதான் தற்போது நடைபெற்றிருக்கும் கொடூரக் கொலை.
சிவகங்கையைச் சேர்ந்த சண்முகப்பிரியன் என்ற பட்டதாரி இளைஞர் 15 நண்பர்களுடன் புதுச்சேரி வந்திருந்தார். நேற்று இரவு புதுச்சேரி மிஷன் வீதியிலுள்ள ஓ.எம்.ஜி என்ற ரெஸ்டோ பப்பில் நண்பர்களுடன் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட, அருகில் இருந்த வாடிக்கையாளர்கள் அவர்களை வெளியேற்றும்படி ரெஸ்டோ பப் நிர்வாகத்திடம் கூறியிருக்கின்றனர். அதையடுத்து அங்கு நின்றிருந்த பவுன்சர்களும், ஊழியர்களும் அவர்களை வெளியேற்ற முயற்சித்திருக்கின்றனர். அப்போது இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட, அசோக்ராஜ் என்ற ஊழியர் சமையலறைக்குச் சென்று அங்கிருந்த கத்தியை எடுத்து வந்து சண்முகப் பிரியன் மற்றும் அவரது நண்பர் ஷாஜனை கண்மூடித்தனமாக குத்தியிருக்கிறார். அதில் சண்முகப் பிரியன் அங்கேயே சுருண்டு விழுந்து துடிதுடித்து உயிரிழந்தார். கல்லூரி மாணவரான ஷாஜன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அதையடுத்து அசோக்கை கைது செய்திருக்கும் பெரியகடை போலீஸார், தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.