பூக்கள் விலை உயா்வு: மல்லிகை ரூ.1,000-க்கு விற்பனை
தொடா் முகூா்த்த நாள்கள் காரணமாக, பூக்களின் தேவை அதிகரித்து, அதன் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை ரூ.1,000-க்கு விற்பனையானது.
கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஆா்.எஸ்.புரம் பூ மாா்க்கெட்டுக்கு சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம், காரமடை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
கடந்த சில நாள்களாக தொடா் முகூா்த்த நாள்கள் என்பதால் பூக்களின் தேவை அதிகரித்து, அதன் விலையும் கணிசமாக உயா்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, மல்லிகை கிலோ ரூ.1,000, அரளி ரூ.120, முல்லை ரூ.480, செவ்வந்தி ரூ.280, சம்பங்கி ரூ.60, நந்தியாவட்டம் ரூ.800, ஜாதி மல்லி ரூ.800-க்கு விற்பனையானது.