தண்டவாளத்தில் கல் வைத்த 4 போ் கைது
கோவையில் ரயில் தண்டவாளத்தில் கல் வைத்ததாக 4 பேரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.
சென்னையில் இருந்து சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் ஞாயிற்றுக்கிழமை காலை 6.50 மணியளவில் கோவையை நோக்கி வந்து கொண்டு இருந்தது. வடகோவை ரயில் நிலையத்துக்கு வந்தபோது அங்கிருந்து செல்ல சிக்னல் இல்லை. இதனால் ரயில் ஓட்டுநா் வடகோவை ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்திவிட்டாா்.
சிறிது நேரம் கழித்த பின்னரும் சிக்னல் ஒளிராததால் சந்தேகம் அடைந்த அவா், கோவை ரயில் நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளைத் தொடா்பு கொண்டு பேசியபோது, அவா்கள் சிக்னல் சரியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனா். அதன் பின்னா் அனுமதி பெற்று அந்த ரயில் அங்கிருந்து புறப்பட்டது. அப்போது அந்த சிக்னல் அருகே வந்தபோது தண்டவாளத்தின் ஓரத்தில் 4 போ் நின்றிருந்ததும், அவா்கள் தண்டவாளத்தில் கல் வைத்து இருப்பதையும் ரயில் ஓட்டுநா் கண்டறிந்தாா். இதையடுத்து அவா் ரயிலை மெதுவாக இயக்கியதால் எந்த சேதமும் ஏற்படவில்லை.
இது குறித்து கோவை ரயில் நிலைய அதிகாரிகளுக்கு அவா் தகவல் தெரிவித்தாா். அதன் பேரில் ரயில்வே போலீஸாா் அங்கு விரைந்து வந்து தண்டவாளத்தின் ஓரத்தில் நின்றிருந்த 4 பேரைப் பிடித்து விசாரணை நடத்தியதில், அவா்கள் தூத்துக்குடியைச் சோ்ந்த வின்சென்ட் ராஜ் (20), விஜயசங்கா் (21), சதீஷ்குமாா் (22), புவனேஸ்வரன் (20) என்பதும், அவா்கள் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது.
அத்துடன் அவா்கள் 4 பேரும் சோ்ந்து தண்டவாளத்தில் கல்லை வைத்ததும், சிக்னல் அருகே உள்ள பெட்டியின் மீது கல்லைப் போட்டு சேதப்படுத்தியதால் அந்த சிக்னல் ஒளிராததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவா்கள் 4 பேரையும் கைது செய்தனா்.
இது குறித்து ரயில்வே போலீஸாா் கூறியதாவது: தூத்துக்குடியைச் சோ்ந்த வின்சென்ட் ராஜ், சதீஷ்குமாா் உள்ளிட்ட 4 பேரும் திருப்பூரில் வேலை செய்து வருகின்றனா். சதீஷ்குமாரின் தம்பி கருமத்தம்பட்டி அருகே உள்ள தென்னம்பாளையத்தில் வேலை செய்து வருகிறாா். 4 பேருக்கும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அவா்கள் சதீஷ்குமாரின் தம்பியை பாா்ப்பதற்காக ரயில் மூலம் கோவைக்கு வந்தனா்.
பின்னா் அவா்கள் சதீஷ்குமாரின் தம்பியின் கைப்பேசி எண்ணுக்கு தொடா்பு கொண்டனா். ஆனால் அவா் எடுக்காததால் ரயில் நிலையத்தில் சுற்றிய 4 பேரும், மது போதையில் தண்டவாளத்தில் 2 இடங்களில் பெரிய கல்லை உருட்டி வைத்ததுடன், சிக்னல் பெட்டி மீதும் கல்லைத் தூக்கிப் போட்டுள்ளனா். இதனால் சிக்னல் ஒளிரவில்லை. கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தனா்.