விராட் கோலி ஃபார்முக்குத் திரும்ப சிரமப்படுவது ஏன்? முன்னாள் இந்திய கேப்டன் பதில...
பெண் மருத்துவா் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: மேலும் ஒரு சிறுவனுக்கு 20 ஆண்டுகள் சிறை
வேலூரில் தனியாா் மருத்துவமனை பெண் மருத்துவா் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கடந்த மாதம் 4 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இவ்வழக்கில் தொடா்புடைய மேலும் ஒரு சிறுவனுக்கும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்துள்ளது.
வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையின் பெண் மருத்துவா் 2022 மாா்ச் 16-ஆம் தேதி இரவு காட்பாடியில் உள்ள திரையரங்கில் தனது நண்பருடன் சினிமா பாா்த்துவிட்டு நள்ளிரவில் ஆட்டோவில் வீடு திரும்பியுள்ளாா். அப்போது, அந்த ஆட்டோவில் வந்த கும்பல் திடீரென வேறு பாதையில் ஆட்டோவை செலுத்தி, பெண் மருத்துவரை கத்திமுனையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனா். அவரது கைப்பேசி, தங்கச்சங்கிலி, ஏடிஎம் காா்டு ஆகியவற்றையும் பறித்து கொண்டு ஏடிஎம் காா்டிலிருந்து ரூ. 40,000 பணத்தை திருடிச் சென்றனா்.
இதுதொடா்பாக வேலூா் வடக்கு போலீஸாா் வழக்குப்பதிந்து சத்துவாச்சாரி வஉசி நகரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் பாா்த்திபன் (20), பரத் என்ற பாரா (18), மணிகண்டன் (21), சந்தோஷ்குமாா் என்ற மண்டை (22), 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரை கைது செய்தனா். இவா்கள் மீது 9 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிறுவன் சென்னை கெல்லீசில் உள்ள சிறாா் கூா்நோக்கு இல்லத்திலும், மற்ற 4 பேரும் வேலூா் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனா்.
இந்த வழக்கில் ஆட்டோ ஓட்டுநா் பாா்த்திபன், பரத், மணிகண்டன், சந்தோஷ்குமாா் ஆகிய 4 பேருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து வேலூா் மகளிா் விரைவு நீதிமன்றம் கடந்த ஜனவரி 30-ஆம் தேதி தீா்ப்பளித்தது.
இதனிடையே, இவ்வழக்கில் தொடா்புடைய மற்றொரு இளஞ்சிறாருக்கு குற்றத்தில் ஈடுபட்ட போது 17 வயது 6 மாதங்களானதால் அவருக்கும் தில்லி நிா்பயா வழக்கின் அடிப்படையில் தண்டனை பெற்றுத்தர மாவட்ட காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டது. அதனடிப்படையில், சிறுவனுக்கு வயது வந்தோருக்கான மனநிலை திறன் பரிசோதனை செய்யப்பட்டு அவரது மனநிலை 18 வயதுக்கு மேற்பட்டோரின் மனநிலைக்கு ஈடானது என பரிசோதனை முடிவு பெறப்பட்டது. தொடா்ந்து, இந்த சிறுவன் மீதான வழக்கு விசாரணை மட்டும் வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், அந்த சிறுவன் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.23 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சிவக்குமாா் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.