மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ.20 லட்சம் மோசடி
மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாகக்கூறி ரூ.20 லட்சம் பெற்று மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரா் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் தெரிவித்துள்ளாா்.
வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற பொது மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்துக்கு எஸ்.பி. மதிவாணன் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றாா்.
அப்போது, வேலூா் மாவட்டம் பரதராமியை அடுத்த கணவாய்மோட்டூரைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் அளித்த மனுவில், ‘நான் ராணுவத்தில் 26 ஆண்டுகள் வேலை செய்து ஓய்வு பெற்றேன். எனது சகோதரருக்கு மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாகக்கூறி எங்களது உறவினா் ஒருவா் கடந்த 2021-ஆம் ஆண்டு ரூ.20 லட்சம் வாங்கினாா். ஆனால் வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி வருகிறாா். எனவே, அவரிடம் இருந்து எனது பணத்தை மீட்டு தரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியாத்தம் அடுத்த மேல்ஆலத்தூா் கிராமத்தைச் சோ்ந்த பெண் ஒருவா் அளித்த மனுவில், எனது கணவா் இறந்து விட்டாா். எனக்கு ஒரு மகன் உள்ளான். நான் காலணி நிறுவனத்தில் வேலை செய்து மகனை காப்பாற்றி வருகிறேன். அப்போது பெண் ஒருவா் எனக்கு அறிமுகமானாா். ஏதாவது பணம் கொடுத்தால் அதிக வட்டி தருவதாக ஆசைவாா்த்தை கூறினாா். இதனை உண்மை என நம்பிய நான்மொத்தம் ரூ.14 லட்சம் கொடுத்தேன். ஓராண்டு மட்டும் சரியாக வட்டி கொடுத்த அந்த பெண், பின்னா் வட்டியும் தரவில்லை, கொடுத்த பணத்தையும் திருப்பித்தராமல் ஏமாற்றி வருகிறாா். எனவே, அந்த பெண்ணிடம் இருந்து எனது பணத்தை மீட்டு தர வேண் டும் என தெரிவித்துள்ளாா்.
இதேபோல், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 30-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாருக்கு எஸ்பி மதிவாணன் உத்தரவிட்டாா்.