பெண்கள் பாதுகாப்புக்காக திமுக அரசு ஒரு துரும்பைக்கூட அசைக்கவில்லை: அண்ணாமலை
கோவையில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
மேலும் தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்கவோ, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யவோ, திமுக அரசு ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில்,
'கோவையில், 17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
பெருகியிருக்கும் போதைப் பொருள்கள் புழக்கத்தால், இளைஞர்கள், விலங்கு மனப்பான்மைக்குச் சென்று கொண்டிருக்கின்றனர் என்பதைத்தான் சிறுமிகள் மீதான இது போன்ற கூட்டுப் பாலியல் வன்முறைகள் காட்டுகின்றன.
ஒரு நிர்பயாவுக்காக நாடே அதிர்ந்தது. ஆனால், தமிழகத்தில் தினம் தினம் சிறுமிகள், மாணவிகள், பெண் காவலர்கள், பெண் அரசு அதிகாரிகள் எனப் பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பு இல்லை.
போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்கவோ, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யவோ, திமுக அரசு ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை.
குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன் என்றால், அவனைக் காப்பாற்றுவதற்காகப் பாதிக்கப்பட்ட பெண்கள் மீதே பழி சுமத்தி விட்டு, வீண் விளம்பரத்துக்காக அப்பா, அண்ணன் என்று நாடகமாடுவதால் யாருக்கு என்ன பலன் என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவாரா?' என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | கவனம்! தமிழகத்தில் இணையவழி பணமோசடிகள் 2.5 மடங்கு அதிகரிப்பு!!
கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை
கோவையைச் சேர்ந்த சிறுமி ஒருவர், சமூக வலைத்தளம் மூலம் சில இளைஞர்களுடன் பழக்கம் கொண்டிருந்தார். அந்த பழக்கம் நாளடைவில் நட்பாக மாறியுள்ளது.
இந்நிலையில் இளைஞர்கள் குனியமுத்தூரில் உள்ள அறைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததன்பேரில் அங்கு சென்ற சிறுமியை 7 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.
சிறுமி வீடு திரும்ப தாமதமானதால், சிறுமியின் பாட்டி உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுமி, கல்லூரி மாணவர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது தெரியவந்தது.
இதையடுத்து உக்கடம் காவல்துறையினர் 7 கல்லூரி மாணவர்கள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.