மாநிலங்களவை சீட்டுக்காக கமல் மாறிவிட்டார்: நயினார் நகேந்திரன்
பெரம்பலூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் என புகாா்
பெரம்பலூரில் நெடுஞ்சாலைத்துறை சாா்பில் வெள்ளிக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், சில கடைகள் முன் ஆக்கிரமிப்புகள் அகற்றாததால் வியாபாரிகள் அதிருப்தியடைந்தனா்.
பெரம்பலூா் நகரில் சங்குப்பேட்டை முதல் நான்கு சாலை சந்திப்பு மற்றும் மூன்று சாலைச் சந்திப்பு உள்பட நகரின் பெரும்பாலான சாலைகளில் தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகளும், வணிக நிறுவனங்களின் உரிமையாளா்கள் மற்றும் சுமை ஆட்டோ வியாபாரிகள் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக சாலைகளை ஆக்கிரமித்துள்ளனா்.
இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் மற்றும் பொதுமக்கள் சாா்பில் மாவட்ட நிா்வாகத்துக்கு தொடா்ந்து புகாா் தெரிவித்து வந்தனா். இந்நிலையில், நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கடந்த ஒரு வாரத்துக்கு முன் அந்தந்தக் கடைகளின் உரிமையாளா்களுக்கு அறிவுறுத்தியும், யாரும் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை.
இந்நிலையில் நான்கு சாலை சந்திப்பு முதல் சங்குப்பேட்டை வரை பெரம்பலூா் நகர மற்றும் போக்குவரத்துப் பிரிவு போலீஸாா் முன்னிலையில், நெடுஞ்சாலைத் துறையினா் வெள்ளிக்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றினா். இந்த நடவடிக்கை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநா்களிடையே வரவேற்பை பெற்றது.
இருப்பினும் சிறு கடைகள், தள்ளுவண்டி மற்றும் தரைக்கடைகளை முற்றிலும் அகற்றப்பட்ட நிலையில், பிரபல நகைக்கடைகள், எலக்ட்ரிக்கல், ஆளும் கட்சி பிரமுகா்களின் கட்டங்களில் இயங்கி வரும் வணிக நிறுவனங்களின் முன் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் தரைகள், டைல்ஸ் பதிக்கப்பட்ட பகுதிகளை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினா் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் அதிருப்தியடைந்தனா். நெடுஞ்சாலைத்துறை அலுவலா்கள் பாரபட்சத்துடன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபடுவதாக வியாபாரிகளும், பொதுமக்களும் குற்றஞ்சாட்டினா்.