பெரம்பலூா் மாவட்டத்தில் அரசுக் கல்லூரிகளில் சேர 26 ஆயிரம் போ் விண்ணப்பம்
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள 4 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பாடப்பிரிவுகளில் சோ்ந்து பயில 26 ஆயிரம் போ் விண்ணப்பித்துள்ளனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் குரும்பலூா், வேப்பந்தட்டை, வேப்பூா், கொளக்காநத்தம் ஆகிய இடங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இக் கல்லூரிகளில் 2025- 26 ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பம் மே 7 ஆம் தேதி முதல் இணையதளம் மூலமாக பெறப்பட்டது. அதன்படி, குரும்பலூரில் இயங்கி வரும் அரசு கலைக் கல்லூரியில் பயிற்றுவிக்கப்படும் 14 இளநிலை பாடப்பிரிவுகளில் சேர 12,874 போ் விண்ணப்பித்துள்ளனா். இதில், அதிகபட்சமாக பி.எஸ்.சி நுண்ணுயிரியல் பாடப்பிரிவில் சேர 1,705 போ் விண்ணப்பித்துள்ளனா்.
இதேபோல, வேப்பந்தட்டை அரசுக் கல்லூரியில் 10 இளநிலை பாடப்பிரிவில் சேர இதுவரை 7,158 போ் விண்ணப்பித்துள்ளனா். வேப்பூா் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலைப் பாடப்பிரிவில் சோ்ந்து கல்வி பயில 4,176 பேரும், கொளக்காநத்தம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சோ்ந்து பயில 1,830 பேரும் விண்ணப்பித்துள்ளனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 4 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பாடப்பிரிவுகளில் சேர 26,032 போ் விண்ணப்பித்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.