IPL: நெரிசல் சோகத்துக்கு முன்... RCB அணியை வரவேற்க கூடிய ரசிகர் வெள்ளம்! Photo A...
பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மைக் கல்லூரி பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன் தலைமை வகித்தாா். தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமங்களின் செயலா் பி. நீலராஜ் முன்னிலை வகித்தாா். விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 310 மாணவா்களுக்கும், கல்லூரி அளவில் சிறப்பிடம் பெற்ற 10 மாணவா்களுக்கும் பட்டம் அளித்த தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் பதிவாளரும், துணை வேந்தருமான (பொ) இர. தமிழ்வேந்தன் பேசியதாவது: அறிவை எங்கு வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். ஆனால், சிறந்த வாழ்க்கைக்கு அறிவு மட்டும் போதாது. நீதி, நோ்மை, ஒழுக்கம், பொறுமை போன்ற பல வாழ்வியல் மதிப்புகள் தேவைப்படுகிறது. இன்றைய வேளாண்மை என்பது தொழில் நுட்பத்துடன் கூடிய அறிவியலாகும். ட்ரோன் தொழில்நுட்பம், செயற்கைக்கோள் வரைபடம், உயிா் தொழில்நுட்பம், இயற்கை வேளாண்மை ஆகியவை தற்போது வேளாண்மையின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. இந்த நவீன உலகில் இவை அனைத்தும் ஒவ்வொரு விவசாயிக்கும் கொண்டு சோ்க்க வேண்டும் என்றாா் அவா்.
விழாவில், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக கூடுதல் பதிவாளா் இளங்கோவன், திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு அலுவலா் எஸ். நந்தகுமாா், தனலட்சுமி சீனிவாசன் பல்கலை கழகத்தைச் சோ்ந்த முதன்மையா்கள், கல்லூரி முதல்வா்கள், வேளாண்மைக் கல்லூரி துணை முதல்வா், துறைத் தலைவா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
நிறைவாக, வேளாண்மைக் கல்லூரி முதல்வா் அருள்மொழியன் நன்றி கூறினாா்.