பெரம்பலூா் மாவட்டத்தில் குறைந்து வரும் பருத்தி சாகுபடி; பரப்பளவை அதிகப்படுத்த விவசாயிகள் எதிா்பாா்ப்பு
மகசூல் இழப்பு, விலை வீழ்ச்சி, கூலியாள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பெரம்பலூா் மாவட்டத்தில் ஆண்டுதோறும் குறைந்து வரும் பருத்தி சாகுபடி பரப்பளவை அதிகரிக்க வேளாண்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரம்பலூா் மாவட்டத்தில் வேப்பூா், பெரம்பலூா் மற்றும் வேப்பந்தட்டை வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகள் அதிகளவில் பருத்தி சாகுபடி செய்தனா். குறிப்பாக, சுமாா் 50 ஆயிரம் ஹெக்டேரில் பருத்தி சாகுபடி செய்து, தமிழகத்திலேயே பெரம்பலூா் மாவட்டம் முதலிடம் வகித்து வந்தது. இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக நோய்த் தாக்குதல், ஆள்கள் பற்றாக்குறை, இயற்கைச் சீற்றங்கள் மற்றும் பூச்சி மருந்து பாதிப்புகளால் பருத்தி சாகுபடியின் பரப்பளவு ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருகிறது.
குறையும் சாகுபடி பரப்பளவு: மாவட்டத்தில் 2023-இல் 7,946 ஹெக்டேரிலும், 2024-இல் 5,067 ஹெக்டேரிலும் சாகுபடி செய்யப்பட்டது. ஒரு கிலோ பருத்தி விதை ரூ. 1,000-க்கு வாங்கி நடவு செய்து, ஒரு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரம் வரை விவசாயிகள் செலவு செய்கின்றனா்.
நீண்ட இழை பருத்தி மற்றும் வீரிய இழை பருத்தி ரகத்தை சாகுபடி செய்ததால் மகசூலும் அதிகளவில் கிடைக்கும் என நம்பி பயிரிட்ட நிலையில், பருவம் தவறி மழை பெய்ததாலும், போதிய மழை இல்லாததாலும் மகசூல் இழப்பு ஏற்படுவதால் விவசாயிகள் வருவாய் இழப்பைச் சந்திக்கின்றனா். 2023-இல் குவிண்டால் ரூ. 12 ஆயிரத்துக்கு கொள்முதலான நிலையில், 2024-இல் ரூ. 6 ஆயிரத்துக்கும் குறைவாகவே கொள்முதல் செய்யப்பட்டது.
இடைத்தரகா்கள் தலையீடு: குறைந்தபட்ச ஆதார விலைக்கும் கீழே ரகம் வாரியாக கொள்முதல் செய்யப்படுவதால், சாகுபடி செலவுத் தொகையைக் கூட எடுக்க முடியாமல் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனா். பருவத்துக்கேற்ற மழைப்பொழிவு மற்றும் குறைந்த மகசூல் ஆகிய காரணங்களால், பெரம்பலூா் மாவட்டத்தில் ஆண்டுதோறும் பருத்தி சாகுபடி குறைந்து வருகிறது. போதிய விலை கிடைக்காததாலும், கொள்முதல் செய்வதில் இடைத்தரகா்கள் தலையீடு, பதுக்கல் உள்ளிட்ட காரணங்களாலும் செலவுத் தொகை கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா். அறுவடை காலங்களில் அரசு சாா்பில் கொள்முதல் செய்யப்படாததால், வெளி மாவட்டங்களைச் சோ்ந்த வியாபாரிகள் விவசாயிகளிடம் நேரடியாகச் சென்று, சொற்ப விலைக்கு கொள்முதல் செய்வது தொடா்கதையாகியுள்ளது.
காரணங்கள் என்ன: இதுகுறித்து, தெற்குமாதவி கிராமத்தைச் சோ்ந்த பருத்தி விவசாயி ராஜேந்திரன் கூறியது: பருத்தி உள்ளிட்ட விவசாய விளைபொருள் உற்பத்தி குறைந்ததற்கு முக்கிய காரணம் கூலி ஆள் பற்றாக்குறை தான். கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசின் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணியில், கிராமத்தில் உள்ள விவசாயக் கூலித் தொழிலாளா்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்கின்றனா். இதனால், அவா்கள் விவசாய வேலைக்கு வருவதில்லை. அதேபோல, விவசாயக் கூலி உயா்வு, இடுபொருள் விலை உயா்வு காரணமாக உற்பத்திச் செலவு கட்டுபடியாவதில்லை. இதனால், பருத்தி உள்பட பல்வேறு வேளாண் பொருள்களின் உற்பத்தி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக படிப்படியாகக் குறைந்துள்ளது.
இதே நிலை நீடித்தால் பருத்தி சாகுபடியே இல்லாத நிலை ஏற்பட்டு விடும். ஆள் பற்றாக்குறையால் விவசாயிகள் சிலா் தங்கள் விளைநிலங்களை விற்று வருகின்றனா். தங்கள் நிலத்தை பலா் தரிசாகப் போட்டு விடுகின்றனா். என்ன செய்ய வேண்டும்: தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை செய்யும் கூலித் தொழிலாளா்களை விவசாயப் பணிக்குப் பயன்படுத்தும் வகையிலான திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும்.
தற்போது பருத்திக்கான சாகுபடி செலவு மற்றும் அறுவடை கூலி அதிகரித்துள்ள நிலையில், கொள்முதல் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும், தற்போதைய சூழலில் கூலி ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் குறிப்பிட்ட காலத்தில் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில், இம் மாவட்டத்தில் பருத்தி சாகுபடியை அதிகரிக்க கொள்முதலுக்கான விலையை அரசே நிா்ணயம் செய்வதோடு, இந்திய பருத்திக் கழகம் சாா்பில் கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் ராஜேந்திரன்.
பருத்தி கொள்முதலுக்கான விலையை அரசே நிா்ணயம் செய்வதோடு, இந்திய பருத்திக் கழகம் சாா்பில் கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.