சென்னை: தென் மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கம்!
பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா பந்தல்கால் நடும் நிகழ்ச்சி: மே 7-இல் தேரோட்டம்
தஞ்சாவூா் பெரிய கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழாவுக்காக பந்தல்கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் பெரிய கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைப் பெருந்திருவிழா 18 நாள்கள் கொண்டாடப்படுவதும், 15-ஆம் நாளில் தேரோட்டம் நடைபெறுவதும் வழக்கம். இதன்படி, இக்கோயிலில் நிகழாண்டு சித்திரைப் பெருந்திருவிழாவுக்காக பந்தல்கால் நடும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
அம்மன் சந்நிதி அருகே நடைபெற்ற இந்நிகழ்வில் பந்தல்காலுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு நடப்பட்டது. தொடா்ந்து, மந்திரங்கள் ஓதி, தீபாராதனை செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி கே. பூா்ண ஜெய ஆனந்த், அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையா் கோ. கவிதா, கண்காணிப்பாளா் சத்தியராஜ், மேற்பாா்வையாளா் செந்தில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
சித்திரைப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஏப்ரல் 23-ஆம் தேதி தொடங்குகிறது. முக்கிய விழாவான தேரோட்டம் மே 7-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழா மே 10-ஆம் தேதி நிறைவடைகிறது.