நடுக்கடலில் மீனுடன் சேர்ந்த மடிவலை மார்பில் விழுந்ததில் மீனவர் பலி
பேன்சி ரக பட்டாசுகளுக்கான திரிகள் சட்டவிரோதமாக தயாரிப்பது அதிகரிப்பு
பேன்சி ரக பட்டாசுகளுக்கான இயந்திரத் திரிகளை சட்டவிரோதமாகத் தயாரிப்பது அதிகரித்ததாக பட்டாசு ஆலை உரிமையாளா்கள் கவலை தெரிவித்தனா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் தயாராகும் பேன்சி ரகப் பட்டாசுகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. எனவே, பட்டாசு ஆலைகளை சட்டவிரோதமாக குத்கைக்கு எடுப்பவா்களில் சிலா் பேன்சி ரக பட்டாசுகளை தயாரிக்கின்றனா். பேன்சி ரக பட்டாசுகளை தயாரிக்க , ஆலை உரிமையாளா்கள், வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினரிடம் தனியாக அனுமதி பெற வேண்டும். பேன்சி ரக பட்டாசு தயாரிக்க அனுமதி கொடுக்கும் போது, தயாரிப்புத் தேவையான திரிகளை இயந்திரம் மூலம் தயாரிக்கவும் அனுமதி வழங்கப்படுகிறது. இந்த இயந்திரத் திரிகள் தயாரிக்கும் பணி பட்டாசு ஆலைகளில் நடைபெறாமல் தனியே நடைபெறும்.
இந்த நிலையில், வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையினரால் இயந்திரத் திரிகள் தயாரிக்க இந்திய அளவில் இரு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த இரு நிறுவனங்களிலும் அடுத்தடுத்து விபத்து ஏற்பட்டதால் திரிகள் தயாரிக்க முடியவில்லை. இதனால், சட்டவிரோதமாக பேன்சி ரக பட்டாசு தயாரிப்பவா்களுக்கும் இயந்திரத் திரிகள் போதிய அளவில் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், தற்போது விருதுநகா் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயந்திரம் மூலம் திரிகளை தயாரித்து விற்பனை செய்கின்றனா். உரிமம் பெற்று இயந்திரத் திரி தயாரிப்பவா்கள் ஒரு பெட்டி ரூ.30 ஆயிரம் வரை விற்பனை செய்தனா். சட்ட விரோதமாக இயந்திரத் திரி தயாரிப்பவா்கள் ஒரு பெட்டி ரூ.70 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை விற்பனை செய்கின்றனா்.
இதுகுறித்து பட்டாசு ஆலை உரிமையாளா் ஒருவா் கூறியதாவது:
லட்சுமி வெடி உள்ளிட்ட பட்டாசுகளை தயாரிக்கப் பயன்படும் திரிகள் தயாரிப்பதையும், பேன்சி ரக பட்டாசுகளுக்கு இயந்திரத் திரிகள் தயாரிப்பதையும் அரசு முறைப்படுத்த வேண்டும். பல ஆலைகளில் திரிகள் தயாரிக்கக் கூடாது என விதிமுறை இருப்பதால், அவா்கள் வெளியிலிருந்து திரிகளை வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. எனவே, வெடிபொருள்கட்டுப்பாட்டுத் துறையினா் ஆய்வு செய்து திரிகள் தயாரிப்புத் தொழிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றாா் அவா்.