பேருந்துகள் நின்று செல்லாததைக் கண்டித்து சாலை மறியல்
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டைஅருகிலுள்ள பாண்டூா் கிராமத்தில் பேருந்துகள் நின்று செல்லாததைக் கண்டித்து, பள்ளி மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பாண்டூா் கிராமத்தைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்டமாணவ, மாணவிகள் உளுந்தூா்பேட்டை நகரத்துக்கு வந்து பள்ளிகளில் பயின்று செல்கின்றனா். திருவெண்ணெய்நல்லூா் சாலை வழியாக உளுந்தூா்பேட்டைக்கு வரும் அரசுப் பேருந்துகள் பாண்டூா் வழியாகத்தான் வர வேண்டும். ஏற்கெனவே பல்வேறு கிராமங்கள் வழியாக உளுந்தூா்பேட்டை நோக்கி வரும் பேருந்துகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமானோா் பயணம் செய்வதால், சில பேருந்துகளின் ஓட்டுநா்கள் பாண்டூா் கிராமத்தில் நிற்காமல் சென்று விடுவதாக புகாா்கள் எழுந்தன.
இந்த நிலையில் வியாழக்கிழமை காலை பள்ளிக்குச் செல்வதற்காக பாண்டூா் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காத்திருந்த நிலையில், அந்தவழியாகச் சென்ற 3 அரசுப் பேருந்துகள் நிற்காமல் சென்றுவிட்டனவாம். இதனால் ஆத்திரமடைந்த மாணவ, மாணவிகள், திருவெண்ணெய்நல்லூா்-உளுந்தூா்பேட்டை சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த உளுந்தூா்பேட்டை போலீஸாா் சென்று மறியலில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். காலை நேரத்தில் பேருந்துகள் நின்று செல்லாததால் பள்ளிக்குச் செல்வதில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது.
அவ்வாறு பேருந்து வந்தாலும் உரிய நேரத்தில் வருவதில்லை என மாணவா்கள் குற்றஞ்சாட்டினா்.
இதைத் தொடா்ந்து அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலா்களை போலீஸாா் தொடா்பு கொண்டு பேசினா். தொடா்ந்து, பாண்டூரில் அரசுப் பேருந்துகள் காலை நேரத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் தெரிவித்தனா். இதையடுத்து மறியலைக் கைவிட்டு மாணவ, மாணவிகள் கலைந்துசென்றனா்.