பைக் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு
பெரியகுளம் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கெங்குவாா்பட்டி ராம்நகரைச் சோ்ந்தவா் பெருமாள் (63). இவரது உறவினா் ரமேஷ். இருவரும் சனிக்கிழமை இரவு காட்ரோடு அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றனா். அப்போது, வாகனத்தின் செயின் அறுந்து விட்டது. இந்த நிலையில், நிலை தடுமாறிய அந்த வாகனம் மீது, பின்னால் அதிவேகமாக வந்த இரு சக்கர வாகனம் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த பெருமாளை மீட்டு, வத்தலகுண்டு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.