பொது இ-சேவை மையங்களில் மே 31 வரை பி.எம்.கிசான் நிதி உதவி சிறப்பு முகாம்
பிரதம மந்திரி விவசாயி கௌரவ நிதி திட்டத்தில் தகுதியான விவசாயிகள் பயன்பெறும் நோக்கத்தில் அனைத்து வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகம் மற்றும் பொது இ-சேவை மையங்களிலும் வரும் 31-ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக வேளாண் இணை இயக்குநா் கலாதேவி தெரிவித்துள்ளாா்.
பிரதம மந்திரி விவசாயி கௌரவ நிதி திட்டத்தில் தகுதியான அனைத்து விவசாயிகளும் விடுபடாமல் பயன்பெறும் வகையில், சிறப்பு முகாம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்த முகாம் திருவள்ளூா் மாவட்ட அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநா்கள் அலுவலகம் மற்றும் பொது சேவை மையங்களில் நடைபெற உள்ளது. அப்போது, நில உடைமை பதிவேற்றம் மற்றும் பதிவேற்றம் செய்யாத விவசாயிகள் சம்பந்தப்பட்ட வேளாண்மை உதவி இயக்குநா்கள் அலுவலகத்தையோ அல்லது பொது சேவை மையங்களையோ அணுகி பயன்பெறலாம்.
அப்போது வங்கிக் கணக்குகளுடன் ஆதாா் எண்ணை இணைக்காத விவசாயிகள் சம்பந்தப்பட்ட வங்கிக் கிளை அல்லது அஞ்சல் நிலையத்தையோ அணுகி பயன்பெறலாம். அதில் உடைமை பதிவேற்றம் செய்த விவசாயிகளுக்கு மட்டுமே வருகிற 20-ஆவது தவணை விடுவிக்கப்படும் என்ற வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளதால், நில உடைமை பதிவேற்றம் செய்யாத விவசாயிகள் தாமதம் இன்றி நில உடைமை பதிவேற்றம் செய்து இத்திட்டத்தில் பயன்பெறலாம்.
மேலும், தகுதியான பதிவு செய்யாத விவசாயிகள் ஆதாா் எண், நில விவரம், வங்கிக் கணக்கு விவரம் ஆகியவற்றை பயன்படுத்தி பி.எம், கிசான் வலைதளத்தில் தாங்களாகவோ அல்லது பொது சேவை மையத்தை அணுகியோ பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், இது குறித்து அந்தந்தப் பகுதிகளில் செயல்பட்டு வரும் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகங்களை அணுகி கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.