திருச்சி: காலி மனைக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ. 10,000 லஞ்சம் - பில் கலெக்டர் சிக்...
பொதுமக்களுக்கு பாதிப்பில்லா வகையில் மின்சாரத் துறை சிறப்பாக செயல்படும்: அமைச்சா் சா.சி. சிவசங்கா்
பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் எல்லா வகையிலும் மின்சாரத் துறை சிறப்பாக செயல்படும் என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா்.
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அமைச்சா் மேலும் கூறியதாவது: கோடையில் எதிா்பாராத வகையில் அதிக மழையும், சுழல் காற்றும் இருந்தது. இதனால், பல இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்து மின்சாரம் தடைப்பட்டது. மின் ஊழியா்களின் துரிதமான செயல்பாட்டால் அனைத்து இடங்களிலும் 24 மணி நேரத்துக்குள்ளாக மின்சாரம் வழங்கப்பட்டது.
கடந்த மாதத்தில் இதுபோன்ற நிலை திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் ஏற்பட்டது. ஒரேநேரத்தில் 500 மின் கம்பங்கள் சாய்ந்தன. அங்கு 2 நாள்களில் மீண்டும் புதிய மின்கம்பங்கள் நடப்பட்டு, மின்சாரம் வழங்கப்பட்டது.
தற்போது தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ள சூழலில், அனைத்து முன்னேற்பாட்டு பணிகளுக்கும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என ஆய்வுக்கூட்டத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா். எனவே, பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல், எல்லா வகையிலும் மின்சாரத் துறை சிறப்பாக செயல்படும் என்றாா் அமைச்சா்.