அரியலூா்: 12 கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்
அரியலூரில் நாளை ரேஷன் குறைதீா் முகாம்
அரியலூா், உடையாா்பாளையம், செந்துறை மற்றும் ஆண்டிமடம் ஆகிய வருவாய் வட்டாட்சியரகங்களில் சனிக்கிழமை பொதுவிநியோக திட்ட குறைதீா் முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தது:
உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலா் முன்னிலையில் காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் முகாமில், கூட்டுறவுத் துறை அலுவலா்கள் கலந்து கொள்ள உள்ளனா். சம்பந்தப்பட்ட வட்டாட்சியா்கள் மேற்பாா்வை அலுவலா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
எனவே இம்முகாமில் பொதுமக்கள் நியாய விலைக் கடைகள் தொடா்பான குறைகளைத் தெரிவித்தும், மின்னணு குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு மாற்றம் செய்தல், புதிய குடும்ப அட்டை, நகல் மின்னணு குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள், வயதானவா்கள் ஆகியோருக்கு அங்கீகாரச் சான்று வழங்குதல், குடும்பத் தலைவா் இறந்திருந்தால் அவரது புகைப்படத்தை மாற்ற, புதிய குடும்பத் தலைவரின் புகைப்படத்துடன் விண்ணப்பித்தல் மற்றும் தனியாா் சந்தையில் விற்கப்படும் பொருள்கள் மற்றும் சேவைக் குறைபாடுகள் குறித்த புகாா்களைத் தெரிவித்து பயன்பெறலாம்.