"சிந்தூர்" வெற்றி: பிரதமருக்குப் பாராட்டுத் தெரிவித்த முதல்வர் தாமி!
பொள்ளாச்சி தீர்ப்பில் உரிமை கோர நியாயமில்லை; குற்றவாளிகளே ஆதாரங்களை உருவாக்கியிருந்தனர்: திருமாவளவன்
கோவை : பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பினால், இந்தியாவில் இனி எங்கும் தவறுகள் நடக்கக் கூடாது என்பதற்கான எச்சரிக்கை என்று கோவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
இந்த வழக்கில் தி.மு.க., அ.தி.மு.க., என உரிமை கோருவதில் நியாயம் இல்லை ஆதாரங்கள் தண்டனைக்கு மிக முக்கிய வலுவான தடையங்களாக இருந்து இருக்கிறது, இதில் யாரும் உரிமை கோருவதில் அர்த்தமில்லை. குற்றச்சாட்டிலிருந்து அவர்களால் மீள முடியாத அளவிற்கான ஆதாரங்களை அவர்களே உருவாக்கி விட்டார்கள் என்பதே உண்மை என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கோவையில் நடைபெறும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிகழ்வில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த கட்சித் தலைவர் திருமாவளவன் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தமிழ்நாட்டிற்கு களங்கத்தை ஏற்படுத்திய செயல், இது போன்ற கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் இனி தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் எந்த மூலையிலும் நடக்கக் கூடாது என்ற அளவுக்கு இந்த தீர்ப்பு அமைந்து உள்ளது. இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வழக்கில் குற்றவாளிகள் தப்பித்து விடுவார்களோ? என்ற ஐயம் இருந்தது. ஆனால் அரசு தரப்பில் உறுதியாக நின்று வழக்குரைஞர்கள் வாதாடி இருக்கிறார்கள் என்பது இதில் உறுதிபடுகிறது. அந்த வகையில் அரசு தரப்பு வழக்குரைஞர்களையும் பாராட்டுகிறேன். ஏற்கனவே குறிப்பிட்டது போல இதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மட்டுமின்றி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மட்டுமின்றி மனிதநேயம் உள்ள அனைவருக்கும் ஏற்பட்ட ஒரு கொடுங்காயத்திற்கு இடப்பட்ட மாமருந்தாகவே அமைந்து இருக்கிறது.
அந்த வகையில் இந்த தீர்ப்பை வரவேற்கிறேன், பாராட்டுகிறேன். இந்த வழக்கில் தி.மு.க., அ.தி.மு.க., வி.சி.க. என உரிமை கோருவதில் நியாயம் இல்லை, சான்றுகள் வலுவாக இருந்தது. குறிப்பாக செல்போன்கள் மற்றும் சமூக வலைத் தளங்களில் பதிவு செய்த தடையங்கள் இந்த தண்டனைக்கு ஆதாரங்களாக இருந்தது. அதுவே அவர்களால் தப்பிக்க இயலவில்லை. குற்றச்சாட்டிலிருந்து அவர்களால் மீள முடியாத அளவிற்கான ஆதாரங்களை அவர்களே உருவாக்கி விட்டார்கள் என்பதே உண்மை, அந்த ஆதாரங்கள் தான் இந்த தண்டனைக்கு மிக முக்கிய வலுவான தடையாங்களாக இருந்து இருக்கிறது, இதில் யாரும் உரிமை கோருவதில் அர்த்தமில்லை என்றார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கை சி பி ஐக்கு மாற்ற வேண்டும் என சமூக வலைதளங்களில் பரவும் கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், அண்ணா பல்கலைக்கழக மாணவி மட்டுமல்ல யார் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். இந்த வழக்கு அந்த வழக்கு என தனித்தனியாக அணுக முடியாது என்று தெரிவித்துள்ளார்.