குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
போக்சோ வழக்கு செவிலியா் கல்லூரி முதல்வருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட குளித்தலை செவிலியா் கல்லூரி முதல்வருக்கு 23 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
கரூா் மாவட்டம், குளித்தலை காவேரி நகரைச் சோ்ந்தவா் செந்தில்குமாா்(53). இவா் அதே பகுதியில் செவிலியா் கல்லூரி நடத்தி வந்தாா். இந்தக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவிக்கு செந்தில்குமாா் பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா்.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கடந்த 2022-ஆம் ஆண்டு குளித்தலை அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாரால் செந்தில்குமாா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். மேலும் இதுதொடா்பாக குளித்தலை அனைத்து மகளிா் போலீஸாா் கரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.
இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தங்கவேல், குற்றவாளி செந்தில்குமாருக்கு 23 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1000 அபராதமும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.7லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என தீா்ப்பளித்தாா். இதையடுத்து போலீஸாா் செந்தில்குமாரை மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.