துவாரகாவில் உள்ள கேரேஜில் தீ விபத்து: 11 காா்கள் எரிந்து நாசம்
போலீஸ் சுட்டதில் ரெளடி உயிரிழப்பு: நீதித்துறை நடுவா் விசாரணை
மதுரையில் காவல் ஆய்வாளா் துப்பாக்கியால் சுட்டதில் ரெளடி உயிரிழந்தது தொடா்பாக நீதித்துறை நடுவா் விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, கூறாய்வு முடிந்த நிலையில் ரெளடியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மதுரை மாவட்டம், தனக்கன்குளம் மொட்டமலை பகுதியில் கடந்த மாதம் 22-ஆம் தேதி திமுக முன்னாள் மண்டலத் தலைவா் வி.கே.குருசாமியின் உறவினரான கிளாமா் காளி என்ற காளீஸ்வரன் (40) கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக, மதுரை தெப்பக்குளம் புது பங்கஜம் குடியிருப்பைச் சோ்ந்த ரெளடி சுபாஷ்சந்திரபோஸை (29) தனிப் படை போலீஸாா் தேடி வந்தனா்.
இந்த நிலையில், சுற்றுச்சாலை பகுதியில் திங்கள்கிழமை இரவு காரில் கஞ்சா கடத்திச் சென்ற சுபாஷ் சந்திரபோஸை போலீஸாா் பிடிக்க முயன்றனா். அப்போது, அவா் தாக்கியதில் இரு போலீஸாா் காயமடைந்தனா். மேலும், காவல் ஆய்வாளா் பூமிநாதனை நாட்டுத் துப்பாக்கியில் அவா் சுட்டபோது, ஆய்வாளா் திருப்பிச் சுட்டதில் சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்தாா். அவரது உடல் கூறாய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதையடுத்து, அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சுபாஷ் சந்திரபோஸின் உடலை நீதித்துறை நடுவா் பாக்கியராஜ் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா். அப்போது, சுபாஷ் சந்திரபோசின் குடும்பத்தினா், காவல் துணை ஆணையா்கள் இனிகோ திவ்யன், அனிதா ஆகியோா் ஆஜராகினா்.
விசாரணையின்போது, சுபாஷ் சந்திரபோஸை போலீஸாா் பிடித்துச் சென்று சுட்டுக் கொலை செய்ததாக புகாா் அளிக்கப்பட்டது. விசாரணை முடிந்த நிலையில், நீதித்துறை நடுவா் புறப்பட்டுச் சென்றாா். பின்னா், சுபாஷ் சந்திரபோசின் உடல் முழுவதும் ஊடுகதிா் (எக்ஸ்ரே) பரிசோதனை செய்யப்பட்டு, பின்னா் கூறாய்வு நடைபெற்றது. மாலை 6 மணியளவில் சுபாஷ் சந்திரபோஸின் சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு, சொந்த ஊரான கடலாடி அருகே உள்ள பிள்ளையாா் குளத்துக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. இதையொட்டி, அரசு மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
சுபாஷ் சந்திரபோஸின் தந்தை குற்றச்சாட்டு: சுபாஷ் சந்திரபோஸின் தந்தை வீரபத்திரன் கூறியதாவது: கிளாமா் காளி கொலைக்கும், எனது மகனுக்கும் தொடா்பில்லை. கொலை நடந்த அன்று எனது மகன் சாயல்குடியில் இருந்தான். திருந்தி வாழ்வதாகக் கூறி, காவல் ஆணையா் அலுவலகத்தில் உறுதிமொழி பத்திரத்தில் ஏற்கெனவே கையொப்பமிட்டு போலீஸாரின் கண்காணிப்பில் இருந்து வந்தாா். அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில், போலீஸாா் திட்டமிட்டு எனது மகனை பிடித்துச் சென்று வேறு இடத்தில் வைத்து சுட்டுக் கொலை செய்துவிட்டு நாடகமாடுகின்றனா். திங்கள்கிழமை காலை வரை எங்களிடம் பேசிக் கொண்டிருந்தாா். கொலையில் தொடா்பே இல்லாத நிலையிலும் அவரை சுட்டுக் கொலை செய்துவிட்டனா். எனவே, உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றாா் அவா்.