‘போஷ்’ சட்டத்தை அரசியல் கட்சிகள் பின்பற்ற உச்சநீதிமன்றத்தில் மனு
பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் குறைதீா்ப்பு) சட்டம் (போஷ் சட்டம்) 2013-ஐ அரசியல் கட்சிகளும் பின்பற்ற உத்தரவிட கோரி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
யோகமாயா என்று வழக்குரைஞா் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், ‘போஷ் சட்டத்தின் கீழ் பாதுகாப்புப் பெறுவதிலிருந்து அரசியலில் ஈடுபடும் பெண்கள் விலக்கப்பட்டுள்ளனா். இது இந்திய அரசியல் சட்டத்தின் 14,15, 19, 21-ஆகிய பிரிவுகளுக்கு எதிரானது.
போஷ் சட்ட வரம்புக்குள் அரசியல் கட்சிகளும் வருவதால், அந்தச் சட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டிய கடமை அக்கட்சிகளுக்கும் உள்ளன. எனவே அந்தச் சட்டத்தை பின்பற்ற அரசியல் கட்சிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
மேலும் கடந்த 2013-ஆம் ஆண்டு விசாகா வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பின்படி, பாலியல் துன்புறுத்தல் பிரச்னையை கையாள்வதற்கு குறை தீா்ப்பு வழிமுறையை ஏற்படுத்த வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.