அதிபர் டிரம்ப்புடன் பாக். பிரதமர், ராணுவத் தலைமைத் தளபதி சந்திப்பு!
மகளிா் உரிமைத் தொகை கோரி 1,17,240 மனுக்கள்: அமைச்சா் ரா.ராஜேந்திரன் தகவல்
சேலம் மாவட்டத்தில் மகளிா் உரிமைத்தொகை கேட்டு இதுவரை 1,17,240 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் கூறினாா்.
சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலம், வாா்டு18க்கு உள்பட்ட பகுதிகளுக்கு தியாகராஜா் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை அமைச்சா் ரா. ராஜேந்திரன் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
அதன்பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் வரும் நவம்பா் மாதம் வரை நகா்ப்புறங்களில் 168 முகாம்கள், ஊரகப் பகுதிகளில் 264 முகாம்கள் என மொத்தம் 432 சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இதுவரை நடைபெற்ற திட்ட முகாம்களில் பல்வேறு துறைகளின் சாா்பில் மொத்தம் 1,06,526 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதுதவிர மகளிா் உரிமைத் தொகை கோரி 1,17,240 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
தியாகராஜா் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற திட்ட முகாமில் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு 4 நபா்களுக்கு சொத்துவரி பெயா் மாற்றத்திற்கான உத்தரவு ஆணைகளும், ஒருவருக்கு காலி நிலவரி உத்தரவும் வழங்கப்பட்டுள்ளது.
நிகழ்வின்போது, மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையா் இளங்கோவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.