Gold Rate: பவுனுக்கு ரூ.84,000-ஐ எட்டிய தங்கம் விலை; 2 நாள்களில் எவ்வளவு உயர்வு ...
மக்கள் குறைதீா் கூட்டம்: ரூ. 28.92 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
நாமக்கல்: நாமக்கல்லில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் ரூ. 28.92 லட்சம் மதிப்பில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், முதியோா், விதவையா் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக் கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 522 மனுக்களை பொதுமக்கள் வழங்கினா். அவற்றைப் பெற்று கொண்டு பரிசீலனை செய்து உரிய அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.
அதன்பிறகு, தாட்கோ சாா்பில் 9 பயனாளிகளுக்கு பேக்கரி, சுமை வாகனம், சூப்பா் மாா்க்கெட், சுற்றுலா வாகனம், வெல்டிங் பட்டறை, ஜெராக்ஸ் கடை உள்ளிட்ட தொழில்களுக்கு ரூ. 84,50,827- மொத்தத் தொகையில் ரூ. 27,11,860- மதிப்பில் மானியம், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் படேல்நகா் பேஸ் 1 அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பயனாளிக்கு (இந்தியன் வங்கி நிதியாக ரூ. 1.34 லட்சம், பயனாளி சொந்த நிதி ரூ. 15,000) ரூ. 1.49 லட்சம் மதிப்பிலான வீட்டிற்கான கடனுதவி ஆணை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 2 பயனாளிகளுக்கு ரூ. 31,500 மதிப்பில் சக்கர நாற்காலிகள் என மொத்தம் 12 பயனாளிகளுக்கு ரூ. 28,92,360 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.