கோலி, சால்ட் அசத்தல் அரைசதம்: வெற்றியுடன் தொடங்கியது ஆர்சிபி!
மணிப்பூரின் நிலை நமக்கு ஏற்படலாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
சென்னை: மணிப்பூர் மாநிலம் கடந்த 2 ஆண்டுகளாக பற்றி எரிகிறது. ஆனால் நீதிக்கான அவர்களின் குரல்கள் புறக்கணிக்கப்படுகின்றன. ஏனென்றால் நாட்டின் கவனத்தை ஈர்க்க அவர்களுக்கு அரசியல் வலிமை இல்லை. எனவே, நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைவது என்பது நம்முடைய அரசியல் வலிமை குறைப்பு என்று பார்க்க வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை கிண்டியில் உள்ள தனியாா் நட்சத்திர ஹோட்டலில் நடைபெறும் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் ஏழு மாநிலங்களின் கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த முதல் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் தொடக்க உரை ஆற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின்,
இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாநிலத்தில் ஆட்சி செய்யும் ஒரு கட்சியின் அழைப்பினை ஏற்று இத்தனை இயக்கங்கள், கட்சிகள் வந்திருப்பது இந்த கூட்டத்தின் மாபெரும் சிறப்பு. எங்கள் அழைப்பை ஏற்று வருகை தந்துள்ள உங்கள் அனைவரையும் முதலில் வருக வருக என வரவேற்கிறேன்.
நாட்டின் ஜனநாயகத்தைக் காக்க நாம் அனைவரும் ஒரணியில் திரண்டிருக்கிறோம் என்பதை நாட்டிற்கு உணர்த்துவதாக உங்களது வருகை அமைந்துள்ளது. இந்திய ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி ஆகியவற்றைக் காக்க நாம் ஒன்றுகூடியுள்ளோம். இந்த முன்னெடுப்பில் இணைந்துள்ள அத்தனை பேருக்கும் நன்றி.
என்னைப் பொறுத்தவரையில், இந்தியக் கூட்டாட்சியைக் காக்கும் வரலாற்றில் மிகமிக முக்கியமான நாளாக இந்த நாள் அமையப் போகிறது. தொகுதி மறுசீரமைப்பை பற்றி நான் உங்களுக்கு அதிகமாக விளக்க வேண்டிய அவசியமில்லை. வரவிருக்கின்ற அல்லது எதிர்காலத்தில் நடைபெறுகின்ற மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் மேற்கொள்ளவிருக்கும், மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு என்பது, நம்மைப் போன்ற மாநிலங்களை வெகுவாக பாதிக்கப் போகிறது.
மக்கள்தொகையை பல்வேறு சமூகநலத் திட்டங்கள் மூலமாகக் கட்டுப்படுத்திய நம்மைப் போன்ற மாநிலங்கள், அதன் காரணமாக நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையில் நமது பிரதிநிதித்துவத்தை அதிகம் இழக்க நேரிடும். எனவேதான் இதனை நாம் கடுமையாக, ஆணித்தரமாக எதிர்க்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். தற்போதைய மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதில் நாம் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும்.
மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைவதன் மூலமாக நமது எண்ணங்களைச் சொல்வதற்கான வலிமை குறைகிறது. இரண்டு ஆண்டு காலமாக மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது. ஆனால் நீதிக்கான அவர்களின் குரல்கள் புறக்கணிக்கப்படுகின்றன.
ஏனென்றால் நாட்டின் கவனத்தை ஈர்க்க அவர்களுக்கு அரசியல் வலிமை இல்லை. எனவே, நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைவது அல்லது நமது பிரதிநிதித்துவம் குறைவது என்பதை நம்முடைய அரசியல் வலிமையை குறைப்பதாகத்தான் பார்க்க வேண்டும்.
இது வெறும் எண்ணிக்கையைப் பற்றியது மட்டுமல்ல.இது நமது அதிகாரம், நமது உரிமைகள் மற்றும் நமது எதிர்காலத்தின் நலன்களைப் பற்றியது. பிரதிநிதித்துவம் குறைந்து வருவதால், நமது மாநிலங்கள் நமக்குத் தேவையான நிதியைப் பெறுவதற்கு கூட போராட வேண்டி வரும். நமது விருப்பம் இல்லாமல் நமக்கான சட்டங்கள் வடிவமைக்கப்படும். நமது மக்களைப் பாதிக்கும் முடிவுகள், நம்மை அறியாதவர்களால் எடுக்கப்படும். பெண்கள் அதிகாரம் அடைவதில் பின்னடைவுகளைச் சந்திப்பார்கள். மாணவர்கள் முக்கிய வாய்ப்புகளை இழப்பார்கள். உழவர்கள் ஆதரவின்றி பின்தங்குவார்கள். நமது பண்பாடு, அடையாளம் மற்றும் முன்னேற்றம் ஆபத்தை சந்திக்கும். காலம் காலமாக நாம் போற்றிப் பாதுகாத்து வரும் சமூகநீதி பாதிக்கப்படும்.
குறிப்பாக பட்டியலின, பழங்குடி மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க அனுமதித்தாலோ அல்லது நமது மாநில பிரதிநிதித்துவத்தை குறைக்க அனுமதித்தாலோ, நம் சொந்த நாட்டில் நாமே அரசியல் அதிகாரம் இழந்த குடிமக்களாக மாறும் அபாயம் உள்ளது. எனவேதான், தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தைச் சாதாரணமாகக் கருதக் கூடாது என்று சொல்கிறேன்.
அடுத்த கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெறும்! - ரேவந்த் ரெட்டி அறிவிப்பு
ஜனநாயகப் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையையும் நாம் எதிர்க்கவில்லை. ஆனால் அந்த நடவடிக்கையானது, நியாயமான அரசியல் பிரதிநிதித்துவத்தை பாதிக்கக்கூடாது என்றுதான் சொல்கிறோம். இந்தப் போராட்டம் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானது அல்ல; இந்தப் போராட்டம் நியாயமான தொகுதி மறுசீரமைப்பை வலியுறுத்துகிறது என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.
இதனை உணர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை நான் கூட்டினேன். தற்போதைய மக்கள்தொகை அடிப்படையில் தற்போதுள்ள 543 மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டால், தமிழ்நாடு 8 இடங்களை இழக்கும் என்பதை நான் தெளிவுபடுத்தினேன். நாடாளுமன்றத்தின் மொத்த இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால், தமிழ்நாடு 12 இடங்களை இழக்க நேரிடும். இது நமது அரசியல் பிரதிநிதித்துவத்திற்கு நேரடி அடியாகும் என்று சொன்னேன்.
மறுநாளே, கோயம்புத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாடு மற்றும் பிற தென் மாநிலங்கள் விகிதாச்சார அடிப்படையில் நாடாளுமன்ற இடங்களை இழக்காது என்று கூறினார். உள்துறை அமைச்சரின் விளக்கம் தெளிவாக இல்லை, குழப்பமாகத்தான் இருந்தது.
2023-ஆம் ஆண்டு தெலங்கானா மாநிலத்தில் பிரசாரம் செய்ய வந்த பிரதமர் மோடி, சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி மக்கள்தொகை அடிப்படையில் சமூகங்களுக்குப் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என காங்கிரஸ் சொல்கிறது. அடுத்ததாக தொகுதி மறுவரையறை நடக்க உள்ளது. காங்கிரஸ் கட்சி சொல்வதைப் போல மக்கள்தொகையின் அடிப்படையில் மக்களவைத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால், தென் மாநிலங்கள் 100 தொகுதிகளை இழக்க நேரிடும். தென்னிந்திய மக்கள் இதனை ஏற்பார்களா?” என்று கேட்டார்.
இதனடிப்படையில் பார்த்தால், தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்பதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார் என்பதை உணரலாம். எப்போதும் மாநிலங்களை, மாநில உரிமைகளைப் பறிக்கிற கட்சியாக பாஜக இருந்துள்ளது. அவர்கள் தங்களது உள்நோக்கத்தை தொகுதி மறுசீரமைப்புத் திட்டத்தில் செய்ய நினைக்கிறார்கள். இதனை எந்த மாநிலமும் அனுமதிக்கக் கூடாது.
இந்த அச்சுறுத்தலை உணர்ந்து, முன்னெப்போதும் இல்லாத ஒற்றுமையுடன் தமிழ்நாடு செயல்பட்டு வருகிறது. இதேபோன்ற ஒற்றுமையை இந்த அரங்கிலுள்ள அனைத்து மாநிலங்களும் காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்தக் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்த உங்கள் மதிப்புமிக்க பரிந்துரைகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.
இணைய விளையாட்டுகளுக்கு நேரக்கட்டுப்பாடு ஏன்?உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
இந்தக் குழுவுக்கு ‘நியாயமான தொகுதி மறுசீரமைப்புக்கான கூட்டு நடவடிக்கைக் குழு’ என்று பெயரிட நான் முன்மொழிகிறேன். நாம் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல; நியாயமான தொகுதி மறுசீரமைப்புக்கு ஆதரவானவர்கள் என்பதை இந்தப் பெயரே சொல்லும்.
ஒரு நாள் நாம் கூடி ஆலோசித்து, தீர்மானம் நிறைவேற்றுவதோடு மட்டுமே இந்தப் போராட்டம் முடிவடைந்துவிடாது. உரிமையை நிலைநாட்டிட தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது மிக அவசியமாகிறது. மத்திய அரசை வலியுறுத்துவது ஒருபக்கமும், இன்னொரு பக்கம் இதுகுறித்து மக்களிடம் விளக்கிட, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திட இந்த கூட்டு நடவடிக்கைக் குழு மிக அவசியம் என்றே கருதுகிறேன்.
நமது அரசியல்ரீதியான எதிர்ப்பைச் சட்டபூர்வமாக எப்படி நடத்துவது என்பது குறித்து அனைவரும் ஆலோசனைகளைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அரசியல் மற்றும் சட்ட நடவடிக்கைகளை வரையறுப்பதற்காக வல்லுநர்களின் குழுவை அமைக்க நான் முன்மொழிகிறேன். ஒட்டுமொத்த முன்மொழிவு குறித்த தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
ஒற்றுமை உணர்வோடு அனைவரும் ஒன்றுபட்டு போராடினால்தான் வெற்றி பெற முடியும். எந்தச் சூழலிலும் நமது பிரதிநிதித்துவம் குறையக் கூடாது; குறையவிடக் கூடாது என்ற உறுதியோடு போராடுவோம். நியாயமான தொகுதி மறுசீரமைப்பை அடையும் வரை நாம் இணைந்து போராடுவோம் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.