பிலிப்பின்ஸை உளவுப் பார்க்கின்றதா சீனா? தொடரும் உளவாளிகளின் கைதுகள்!
பிலிப்பின்ஸ் நாட்டில் சட்டவிரோதமாக தகவல் சேகரித்த சீன உளவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிலிப்பின்ஸில் அரசு மற்றும் ராணுவத்தின் முக்கிய துறைகளில் சீனாவின் ஈடுபாடுள்ளதா? என்று எழுந்த சந்தேகத்தினால் அந்நாட்டு அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. மேலும், தெற்கு சீனக் கடலில் இரு நாட்டுகளுக்கும் இடையில் பதற்றமான சூழல் நிலவி வருவதாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில் பிலிப்பின்ஸ் நாட்டின் தேசிய புலனாய்வுப் பிரிவு, அந்நாட்டின் முக்கிய தளங்களின் அருகில் சட்டவிரோதமாக தகவல்களைச் சேகரித்தாக சந்தேகிக்கப்பட்ட 2 சீன நாட்டினரை கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், கைது செய்யப்பட்ட சீனர்கள் ரேடியோ சிக்னல்களை இடைமறிக்கும் சாதனத்தை ஓரு காரில் பொருத்தி தங்களது பிலிப்பினோ கூட்டாளிகளுக்கு பணம் கொடுத்து அந்த வாகனத்தை பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் மாளிகை, அமெரிக்க தூதரகம், அகுயினால்டோ மற்றும் ராணுவ தலைமைச் செயலகம் உள்ளிட்ட முக்கிய தளங்களின் அருகில் ஓட்ட வைத்ததாகக் கூறியுள்ளனர்.
இதையும் படிக்க: தென் கொரியாவில் பயங்கர காட்டுத் தீ! மக்கள் வெளியேற உத்தரவு!
மேலும், இதன் மூலம் அவ்விடங்களிலிருந்து பல ரகசிய தகவல்கள் சேகரிக்கப்பட்டதா என அந்நாட்டு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் சீன அரசுக்கு தொடர்புள்ளதா என்பது குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பிலிப்பின்ஸில் உளவு பார்ப்பது சட்டவிரோதமாக தகவல்கள் சேகரிப்பது போன்ற குற்றங்களில் ஈடுபட்ட சீனர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருகின்றது.
முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் தனது காரில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு உபகரணங்கள் மூலம் பிலிப்பின்ஸின் ராணுவத் தளங்களை உளவு பார்த்த பொறியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கடந்த ஜனவரி மாத இறுதியில் தெற்கு சீனக் கடலிலுள்ள பிலிப்பின்ஸின் முக்கிய தளமான பாலவான் தீவின் அருகில் அந்நாட்டு ராணுவம் மற்றும் கடற்படையின் நடவடிக்கைகளை டிரோன் மூலம் உளவுப் பார்த்த 5 சீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.