மதுரை அமெரிக்கன் கல்லூரி புதிய முதல்வா் பால் ஜெயகா்
மதுரை அமெரிக்கன் கல்லூரியின் முதல்வராக பேராசிரியா் பால் ஜெயகா் சனிக்கிழமை தோ்வு செய்யப்பட்டாா்.
மதுரையில் உயா் கல்வி அளிக்கும் நிறுவனங்களில் அமெரிக்கன் கல்லூரி குறிப்பிடத்தக்கது. இந்தக் கல்லூரியின் செயலராகவும், முதல்வராகவும் எம். தவமணி கிறிஸ்டோபா் பதவி வகித்து வந்தாா். இவரது பதவிக் காலம் இந்த ஆண்டு மே 31-ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்தது.
இந்த நிலையில், வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சோ்த்ததாகவும், முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் தவமணி கிறிஸ்டோபா் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இதுதொடா்பாக ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மேலும், இதுதொடா்பான வழக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் நிலுவையில் உள்ளது. அவரது பணிக்காலம் சனிக்கிழமையுடன் (மே 31) நிறைவடைய இருந்த நிலையில், அவரைப் பணியிடை நீக்கம் செய்து கல்லூரிக் கல்வி இயக்ககம் அண்மையில் உத்தரவிட்டது.
இதையடுத்து, அமெரிக்கன் கல்லூரி தற்காலிக புதிய முதல்வராக பேராசிரியா் கண்ணபிரான் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
இந்த நிலையில், அமெரிக்கன் கல்லூரி ஆட்சிமன்றக் குழுவின் அவசரக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி வளாகக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மதுரை, ராமநாதபுரம் திருமண்டலப் பேராயரும், ஆட்சி மன்றக் குழுத் தலைவருமான அருள்தந்தை ஜெய்சிங் பிரின்ஸ் பிரபாகரன் தலைமை வகித்தாா். இதில் புதிய முதல்வா் பதவிக்கு விண்ணப்பித்த பேராசிரியா்களுக்கு நோ்காணல் நடைபெற்றது. பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகளுக்கு உள்பட்டு ஆங்கிலத் துறைப் பேராசிரியா் பால் ஜெயகா் அமெரிக்கன் கல்லூரி புதிய முதல்வராக தோ்வு செய்யப்பட்டாா். இதற்கான சான்றிதழை, அவருக்கு அமெரிக்கன் கல்லூரி ஆட்சி மன்றக் குழுத் தலைவா் அருள்தந்தை ஜெய்சிங் பிரின்ஸ் பிரபாகரன் வழங்கினாா்.
மேலும், ஆட்சிமன்றக் குழுவின் கூட்ட நடவடிக்கைகள், தோ்வுப் பட்டியல் தமிழக கல்லூரிக் கல்வி இயக்குகக அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. பேராசிரியா் பால் ஜெயகா் கல்லூரியின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்ற நிலையில், ஏற்கெனவே தற்காலிகமாகத் தோ்வு செய்யப்பட்ட முதல்வா் கண்ணபிரான் அந்தப் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டாா்.