``மதுரையில் CPM மாநாடு; பிரகாஷ்ராஜ், விஜய்சேதுபதி, சசிகுமார், சமுத்திரகனி பங்கேற்பு'' - பெ.சண்முகம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு, மதுரையில் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் 6-ஆம் தேதிவரை நான்கு நாள்கள் நடைபெற உள்ளது.
மாநாட்டிற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், மாநாட்டு அழைப்பிதழை மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டார்.

பின்பு செய்தியாளர்களிடம் பெ.சண்முகம் பேசும்போது, "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு மூதூர் என்று போற்றக்கூடிய மதுரையில் நடைபெற உள்ளது.
மிகவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையுள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.
அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத், கேரளா முதல்வர் பினராய் விஜயன். பிருந்தா காரத், திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் உள்ளிட்ட அகில இந்திய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
மாநாட்டின் முதல் நாள் நடைபெறும் பொது மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் து.ராஜா. சிபிஐ (எம்.எல்) பொதுச்செயலாளர் திபாங்கர் பட்டாச்சாரியா, ஆர்.எஸ்.பி பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச்சாரியா, பார்வர்டு பிளாக் பொதுச் செயலாளர் ஜி.தேவராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தி பேச உள்ளார்கள்.
கே. பாலகிருஷ்ணன் வரவேற்புரையாற்ற, வரவேற்பு குழுச் செயலாளர் சு.வெங்கடேசன் மற்றும் மாநிலத் தலைவர்கள் பங்கேற்க உள்ளார்கள்.
ஏப்ரல் - 1 ஆம் தேதி தமுக்கம் மைதானத்தில் மூத்த பத்திரிக்கையாளர்கள் என். ராம், வி.பரமேஸ்வரன் ஆகியோர் திறந்து வைக்கும் கண்காட்சியில் கட்சியின் வரலாறு, பாசிசத்தின் கோர நிகழ்வுகள், இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பு குறித்து காட்சிப்படுத்தப்பட உள்ளது. புத்தக கண்காட்சியும் அமைக்கப்பட உள்ளது.
சென்னையிலிருந்து சிந்தனை சிற்பி சிங்காரவேலர் நினைவுச் சுடர், சேலம் சிறை தியாகிகள் நினைவுச் சுடர், கோவை சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவுச் சுடர், மாணவத் தியாகிகள் சோமசுந்தரம் செம்புலிங்கம் நினைவுச் சுடர், மதுரை தியாகிகள் நினைவுச் சுடர் அன்றைய தினம் பெறப்படுகிறது.

கீழ்வெமணியிலிருந்து பிரசார இயக்கமாக எடுத்து வரப்படும் தியாகிகள் நினைவுக்கொடி 1- ஆம் தேதி மாநாட்டில் ஏற்றப்பட உள்ளது.
அதேபோல் மாநாடு தொடங்கிய இரண்டாம் தேதி மாலையிலிருந்து ஒவ்வொரு நாளும் தமிழகத்தின் தலைசிறந்த கலை குழுக்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும், திரைக்கவிஞர்கள் திரை இயக்குனர்கள் கலந்து கொள்ளும் கருத்தரங்கங்களும் நடைபெற உள்ளது.
அதேபோல் 6-ஆம் தேதி மாலை 25 ஆயிரம் செந்தொண்டர்கள் பங்கேற்கும் அணிவகுப்பு நடைபெற உள்ளது இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி மார்ச் 23 ஆம் தேதி தமிழக முழுவதும் நடைபெற்றது.
23 ஆம் தேதி மாலை தமிழக முழுவதுமிருந்து 5 லட்சத்திற்கும் மேற்பட்ட உழைப்பாளி மக்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் பாண்டி கோயில் அருகில் நடைபெற உள்ளது.
தமுக்கம் மைதானத்தில் இரண்டாம் தேதி நடைபெறும் கருத்தரங்கத்தில் தமிழறிஞர் சாலமன் பாப்பையா, திரைப்பட இயக்குநர்கள் ராஜூமுருகன் சசிகுமார் ஆகியோர் பங்கேற்க உள்ளார்கள்.
3-ஆம் தேதி மாலை 'கூட்டாட்சி கோட்பாடு இந்தியாவில் வலிமை' என்ற மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாட்டில் கேரளா முதல்வர் பினராய் விஜயன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், கர்நாடக வருவாய்துறை அமைச்சர் கிருஷ்ணா பைரே கௌடா கலந்து கொள்கிறார்.

பாஜக அரசாங்கம் இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படக்கூடிய சூழ்நிலையில் இந்த கருத்தரங்கம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான்காம் தேதி மாலை திரை கலைஞர்கள் விஜய் சேதுபதி, சமுத்திரகனி, இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள் 5 ஆம் தேதி மாலை திரைக்கலைஞர் ரோகினி வழங்கும் நாடகம் நடைபெற உள்ளது.
அதனைத் தொடர்ந்து திரைக் கலைஞர் பிரகாஷ்ராஜ் திரைப்பட இயக்குநர்கள் மாரி செல்வராஜ், த.செ.ஞானவேல் ஆகியோர் பங்கேற்று கருத்துரையாற்ற உள்ளார்கள்

ஆறாம் தேதி வண்டியூர் ரிங் ரோட்டில் கேரளா முதலமைச்சர் பினராய் விஜயன் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிருந்தா காரத், ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் கே. பாலகிருஷ்ணன், உ.வாசுகி, பி. சம்பத் கலந்து கொண்டு பேச உள்ளார்கள்.
முன்னதாக பாண்டி கோயில் அருகிலிருந்து தொடங்கும் செந்தொண்டர் அணிவகுப்பை, 30 ஆண்டுகளுக்கு மேலாக போராடிய வாச்சாத்தி போராளிகள் தொடங்கி வைக்க உள்ளார்கள்" என்றார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
