திண்டுக்கல்லில் ஜல்லிக்கட்டை கண்டு ரசித்த விக்ரம், துஷாரா விஜயன்
`கறுப்போ, வெள்ளையோ யாராக இருந்தாலும்..' -நிறம் குறித்த அவதூறுக்கு கேரள தலைமைச் செயலாளர் சாரதா பதிலடி
கேரள தலைமைச் செயலாளர் சாரதா முரளிதரன் ஐ.ஏ.எஸ்
கேரள தலைமைச் செயலாளராக இருக்கும் சாரதா முரளிதரன் ஐ.ஏ.எஸ் அதிகாரியை சிலர் கறுப்பு என விமர்சித்ததாக முகநூலில் கருத்து பதிவிட்டிருந்தார்.
நிறம் குறித்த பாகுபாடு மக்களிடம் இன்னும் இருந்துகொண்டிருப்பதாக ஆதங்கப்பட்டிருந்தார் சாரதா முரளிதரன்.
கேரள மாநிலத்தின் முக்கிய பதவியில் இருக்கும் ஒரு பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கே இந்த நிலை என்றால் சாதாரண பெண்களின் நிலை எப்படி இருக்கும் என்ற ரீதியில் இதுகுறித்த விவாதம் எழுந்துள்ளது.
கறுப்பு நிறம் சர்ச்சை..
இது பற்றி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கேரள சட்டசபை எதிர்கட்சி தலைவர் வி.டி.சதீசன் கூறுகையில், "சல்யூட் சாரதா முரளிதரன். நீங்கள் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும் இதயத்தை நெகிழவைக்கிறது. இது விவாதிக்க வேண்டிய விஷயம்தான். கறுப்பு நிறம் உள்ள ஓர் அம்மா எனக்கும் இருந்தார்" என கூறியுள்ளார்.
கறுப்பு நிறம் குறித்த கருத்து விவாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து சாரதா முரளிதரன் கூறுகையில், "கறுப்பு நிறத்தை வைத்து நம்மை வித்தியாசமாக பார்ப்பதை நாங்கள் பலரும் அனுபவித்துள்ளோம். அதைபற்றி நீங்கள் கவலைப்படாமல் உங்கள் வேலையைப்பாருங்கள் என சிலர் கூறுகின்றனர்.
ஆனால், சிலர் இதுபோன்ற சங்கடங்களை அனுபவித்துள்ளதாக என்னிடம் கூறுகின்றனர். திருமணம் பார்க்கும்போது வெள்ளையான அழகியாக இருக்க வேண்டும் என கூறுகிறார்கள். அல்லது கறுப்பாக இருந்தாலும் பார்க்க அழகியாக இருக்க வேண்டும் என்கிறார்கள். இது சம்பந்தமாக சட்டரீதியாக போரிடவேண்டும் என்றுதான் தோன்றுகிறது. வேறுபாடு என்பது பலவகையிலும் உண்டு. அது அழகாக இருக்கலாம், நிறமாகலாம். கறுப்பு என்பதை பிரச்னையாகவும், அதை எப்படி சமாளிக்கலாம் எனவும் சிந்திக்கிறார்கள்.
`தனி மனிதனின் மனநிலை அல்ல'
தெய்வங்கள் கறுப்பாக உள்ளனர், கார்வண்ணன் கறுப்பு என சமாளிக்கிறார்கள். நம் சமூகத்துக்கு நிறத்தைப் பற்றிய பிரச்னை உண்டு. யார் என்னை கறுப்பு எனச் சொன்னார்கள் என நான் வெளிப்படையாக கூற விரும்பவில்லை.
இது ஒரு தனி மனிதனின் மனநிலை அல்ல, ஒரு சமூகத்தின் மனநிலை என்பதால் தனி மனிதனை நான் குற்றம்சொல்ல விரும்பவில்லை. 50 ஆண்டுகளாக நான் இதை அனுபவித்துவிட்டு எனது பார்வையில் மாற்றம் ஏற்பட்டது.
குழந்தைகள் அதை ஏற்றுக்கொள்ளும், சுற்றியுள்ளவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த அனுபவம் 2 வயது முதல் எனக்கு ஏற்பட்டது. அதை இப்போதுதான் நான் வெளிப்படையாக கூறியுள்ளேன். சிலவற்றை பார்ப்பதை அப்படியே கூறுவதை இளம் தலைமுறையினரிடம் நான் பார்த்துள்ளேன்.
வெள்ளை நிற மனைவியை தேடி கண்டுபிடித்ததாக யாரோ கமெண்ட் போட்டுள்ளனர். ஆண்களிடம் இதுபோன்று செயல்படமாட்டார்கள் என தோன்றுகிறது. பெண்களுக்குதான் இதுபோன்ற பிரச்னை அதிகமாக வருகிறது.

`யாராக இருந்தாலும் தன்னம்பிக்கை வேண்டும்'
பெண்களின் நிறம், உருவம் ஆகியவை இப்படித்தான் இருக்க வேண்டும் என சமூகம் நினைக்கின்றது. கறுப்பின் உள்ளில் உள்ள அழகை காண்பதற்கு இந்த சமூகத்துக்கு தெரிய வேண்டும். கறுப்பு நிறத்தை ஹீரோ ஆக்கவேண்டும்.
கறுப்பு குறித்த எனது பிரச்னைகள் என் கணவர் வேணுவுக்கு தெரியும். அதை எல்லாம் உணர்ந்துதான் நாங்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டோம்.
எந்த பதவிக்கு வந்தாலும் கம்பேரிசன் இருக்கும். சிறப்பாக செயல்பட்டு புகழ்பெறும் வகையில் அதிகாரியாக இருந்தால் இதுபோன்ற விமர்சனங்கள் எழும். கறுப்போ, வெள்ளையோ யாராக இருந்தாலும் தன்னம்பிக்கை வேண்டும்" என்றார்.