மதுரையில் ஜாக்டோ- ஜியோ ஆா்ப்பாட்டம்
ஆசிரியா்கள், அரசு ஊழியா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு சாா்பில், மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
2003-ஆம் ஆண்டு ஏப். 1-ஆம் தேதிக்குப் பிறகு பணிக்குச் சோ்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், பள்ளிக் கல்வித் துறை மூலம் 21.12.2023-இல் வெளியிடப்பட்ட அரசாணை எண். 243-ஐ ரத்து செய்ய வேண்டும், இடைநிலை ஆசிரியா்களுக்கும், உயா்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், முடக்கப்பட்ட சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளா் க.சந்திரபோஸ், பா.பாண்டி, வி.ச.நவநீதகிருஷ்ணன், மு.பொற்செல்வன், அ.ஜோயல்ராஜ், இரா.தமிழ் ஆகியோா் தலைமை வகித்தனா். முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளா் கே.பி.ஓ.சுரேஷ் ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கிவைத்தாா். மாநில ஒருங்கிணைப்பாளா் மு.சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று நிறைவுரையாற்றினாா்.

இதில் திரளான ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தில் அரசு ஊழியா் ஒருவா் யாசகா் போல வேடமிட்டு பங்கேற்றாா். இந்தப் போராட்டம் காரணமாக, ஆட்சியரக முதன்மை நுழைவு வாயில் அடைக்கப்பட்டது. ஆட்சியரகத்திலிருந்து வெளியே செல்லும் பாதை திறக்கப்பட்டு அதன்வழியாக பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனா்.
தற்செயல் விடுப்பு...
கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோா் செவ்வாய்க்கிழமை தற்செயல் விடுப்பு எடுத்தனா். இதனால், மாவட்ட ஆட்சியரகம், வணிக வரித் துறை அலுவலகம், வருவாய்த் துறை அலுவலகங்கள் உள்பட பெரும்பாலான அலுவலகங்கள் பணியாளா்களின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.