Ashwani Kumar: பஞ்சாப் தவறவிட்ட மாணிக்கம்; பட்டை தீட்டிய பல்தான்ஸ்; யார் இந்த அஸ...
மத்தியப் பிரதேசத்தில் 9 நாள்களுக்கு இறைச்சி விற்பனைக்குத் தடையா?
மத்தியப் பிரதேசத்தில் ஹிந்து பண்டிகைகள் நவராத்திரியை முன்னிட்டு 9 நாள்களுக்கு இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்க ஹிந்து அமைப்புகள், பாஜக எம்.எல்.ஏ-க்கள் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தின் மைஹார் பகுதியில் மார்ச் 30 முதல் ஏப்ரல் 7 வரையிலான 9 நாள்களுக்கு நவராத்திரி பண்டிகையை ஒட்டி முட்டை, இறைச்சி விற்பனைக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
அதேபோல, மாநிலத்தின் இரு முக்கிய நகரங்களான போபால், இந்தூர் பகுதிகளிலும் அடுத்தடுத்து வரவிருக்கும் ஹிந்து, ஜெயின், சிந்தி, புத்த மத பண்டிகைகளை முன்னிட்டு 4 நாள்களுக்கு இறைச்சி விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.
குடி பத்வா மற்றும் சந்த் (மார்ச் 30), ராம நவமி (ஏப்ரல் 6), மஹாவீர் ஜெயந்தி (ஏப்ரல் 10), புத்த பூர்ணிமா (மே 12) ஆகிய பண்டிகை நாள்களில் பாஜக நிர்வாகத்தின் கீழுள்ள இரு நகரங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
4 நாள்கள் தனித்தனியே இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், நவராத்திரியை முன்னிட்டு இந்தூர் நகரம் முழுவதும் 9 நாள்களுக்கு இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்க ஹிந்து அமைப்பான ஹிந்து ராஷ்டிர சங்கதன் வலியுறுத்தியுள்ளது.
”நவராத்திரி நாள்களில் இறைச்சிக் கடைகள் திறந்திருப்பதைக் கண்டால் எங்கள் அமைப்பினர் அவற்றை மூடுவார்கள்” என அந்த அமைப்பின் தலைவர் ராஜேஷ் சிரோத்கர் மிரட்டியுள்ளார்.
அதுமட்டுமின்றி, பாஜகவைச் சேர்ந்த பல எம்.எல்.ஏ-க்கள் 9 நாள்கள் இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர். இதில், அம்மாநில அமைச்சர்களும் அடங்குவர்.
ஹிந்து அமைப்பினர் இறைச்சி விற்பனைக்குத் தடை கோருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் சாச் சலூஜா, “கேஎஃப்சி, மெக் டொனால்ட்ஸ் போன்ற பெரிய உணவகங்களுக்கு இந்தத் தடை உத்தரவு ஏன் விதிக்கப்படுவதில்லை? பெரிய உணவகங்களைத் தவிர்த்துவிட்டு ஏன் சிறிய கடைகளின் உரிமையாளர்களை மட்டுமே குறிவைக்கிறீர்கள்?“ என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த நிலையில், பண்டிகைகள் வருவதையொட்டி ம.பி.யின் தாமோ நகரில் கடிகார கோபுரத்தின் மீது காவிக் கொடிகளைக் கட்ட முயன்ற ஹிந்து அமைப்பினரை அரசு அதிகாரிகள் தடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து, தலைமை முனிசிபல் அதிகாரி பிரதீப் சர்மாவின் முகத்தில் கருப்பு மையினைப் பூசி ஹிந்து அமைப்பினர் அட்டூழியம் செய்துள்ளனர். இதுபற்றி புகாரளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.