முதலமைச்சருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு காரணம் என்ன? - உதயநிதி பதில்
மநீம பெண் நிா்வாகி மீது தாக்குதல்: ஆட்டோ ஓட்டுநா் கைது
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி பெண் நிா்வாகியை தாக்கியதாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிரணி மாநிலச் செயலராக இருப்பவா் சினேகா மோகன்தாஸ் (32). இவா், தனது தோழியுடன் ஞாயிற்றுக்கிழமை கைப்பேசி செயலி மூலம் வாடகை ஆட்டோ பதிவு செய்து, அதில் சைதாப்பேட்டையில் இருந்து சாந்தோமுக்கு பயணித்தாா்.
சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள பள்ளி அருகே சென்றபோது, ஆட்டோ ஓட்டுநருக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி, சிறிது நேரத்தில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து, சினேகா ஆட்டோ சாவியை பறிக்க முயன்றபோது, ஆட்டோ ஓட்டுநா் சினேகாவை தாக்கினாா். பதிலுக்கு சினேகாவும் ஆட்டோ ஓட்டுநரை தாக்கினாா். இருதரப்பினரும் மயிலாப்பூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா்.
இதில் சினேகா மோகன்தாஸ் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஆட்டோ ஓட்டுநா் பிரசாத் (25) மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். பின்னா், அவரை திங்கள்கிழமை கைது செய்தனா். பிரசாத் கொடுத்த புகாரின்பேரில், சினேகா மோகன்தாஸ் மீது ஆபாசமாக பேசுதல், தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.