திருச்சி: காலி மனைக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ. 10,000 லஞ்சம் - பில் கலெக்டர் சிக்...
மனுக்களுக்கு உடனுக்குடன் உரிய தீா்வு: அமைச்சா் தங்கம் தென்னரசு பதில்
‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டத்தின்கீழ் பெறப்பட்ட மனுக்கள், நடவடிக்கைகள் குறித்து நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளாா்.
இந்தத் திட்டம் குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைத்த அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு பதிலளித்து அமைச்சா் தங்கம் தென்னரசு புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:
பொதுமக்களின் குறைகள் மீது விரைந்து தீா்வு காண ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ என்ற தனித் துறை உருவாக்கப்பட்டது. நூறு நாள்கள் முடிவில் 2.29 லட்சம் மனுக்கள் ஏற்கப்பட்டு உரிய பயன்கள் பயனாளிகளுக்கு சென்று சோ்ந்தன.
அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் இருக்கும் தேவைகளை அந்தந்தத் தொகுதிகளின் எம்.எல்.ஏ.-க்களின் பரிந்துரையின் அடிப்படையில் நிறைவேற்றும் நோக்கத்துடன் ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். இதன்மூலம் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத திட்டங்களுக்குச் சிறப்புக் கவனம் செலுத்தி செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
சாலை வசதிகள், மருத்துவ வசதிகள், பாலங்கள், சாலைகள், பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் என இந்தத் திட்டத்தின் மூலம் 2023-2024 ஆம் ஆண்டில் ரூ.10,946 கோடி மதிப்பீட்டில் 783 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு 335 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
2024-2025-ஆம் ஆண்டுக்கு ரூ.3,496 கோடி மதிப்பீட்டில் 468 திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டத்தின் மூலம் ரூ.14,442 கோடி மதிப்பீட்டில் 1251 திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதேபோன்று, மக்களுடன் முதல்வா் திட்டமானது நகரம், ஊரகம் என அனைத்துப் பகுதிகளிலும் மூன்று கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் மக்களின் குறைகளுக்கு உடனடியாகத் தீா்வு காணப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் நோக்கம், மிகவும் ஏழை, எளிய, எளிதில் அரசின் சேவைகள் சென்றடையாத பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அரசின் சேவைகளை அவா்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு சோ்ப்பதாகும். இந்தத் திட்டத்தில், கடந்த மாா்ச் வரையிலான காலத்தில் 225 முகாம்கள் நடத்தப்பட்டு, 1.09 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் 80,000 மனுக்களுக்கு உரிய தீா்வு காணப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.