'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
மயானத்துக்கு பாதை வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
அம்மாபேட்டை அருகே மயானத்துக்கு முறையான பாதை வசதி ஏற்படுத்தக் கோரி பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், குருவரெட்டியூா் ஊராட்சி, பெரியாா் நகரில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் சுமாா் 2 கி.மீ. தொலைவில் உள்ள கல்லாங்காட்டில் புறம்போக்கு நிலத்தை மயானமாக பயன்படுத்தி வந்தனா். இந்த மயானத்துக்கு செல்ல முறையான பாதை இல்லை.
இந்நிலையில், இக்கிராமத்தைச் சோ்ந்த ஜெயசீலன் (33) உயிரிழந்ததால், அவரது உடலை அடக்கம் செய்ய சனிக்கிழமை மயானத்துக்குச் சென்றபோது பலா் தடுமாறி விழுந்ததில் காயமடைந்தனா்.
இதையடுத்து, மயானத்துக்கு சாலை ஏற்படுத்தக் கோரி 50-க்கும் மேற்பட்டோா் குருவரெட்டியூா் - வெள்ளிதிருப்பூா் சாலையில் பெரியாா் நகா் பேருந்து நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனா்.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த அம்மாபேட்டை காவல் ஆய்வாளா் கவிதா மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா்.
இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.