மாணவர்களுடன், ஆசிரியர்களும் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்: பினராயி விஜயன...
மலைவாழ் மக்கள் மேம்பாட்டிற்கு சிறப்பு முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மலைவாழ் மக்கள் மேம்பாட்டிற்காக, ஒசூா் வனக்கோட்டம், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை இணைந்து சிறப்பு முகாமை நடத்தின.
ஒசூா் வனக்கோட்ட வனச்சரகங்களில் உள்ள பழங்குடியின மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் வனத் துறை பல திட்டங்கள் மூலம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதில், காலநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்கான தமிழ்நாடு உயிா்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டம், ஜப்பான் சா்வதேசக் கூட்டுறவு நிறுவனத்தின் உதவியுடன் செயல்பட்டு வருகிறது.
முதன்மை தலைமை வனப்பாதுகாவலா் மற்றும் தலைமை திட்ட இயக்குநா் அன்வா்தீன் அறிவுறுத்தலின்படி, ஒசூா் வனக்கோட்டத்தில் வனத்தை சாா்ந்து வாழ்ந்துவரும் பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு வனத் துறை, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை இணைந்து அஞ்செட்டி வனச்சரகம் சேசுராஜபுரம் கிராமத்தில் இந்த சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமில் அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை மற்றும் பிற நல திட்டங்களை பழங்குடியின மக்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கிலும், அரசின் நலத் திட்டங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கிலும் நடத்தப்பட்டது.
இம்முகாமை வன உயிரினக் காப்பாளா் பகான் ஜெகதீஷ் சுதாகா் தலைமை வகித்து நடத்தினா். முகாமில் உதவி வனப் பாதுகாவலா் யஸ்வந்த் ஜெகதீஷ் அம்புல்கா், தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் மாதேஸ்வரன் மற்றும் வன அலுவலா்கள், தொழிலாளா் நலத் துறையைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு தேவையான விளக்கம் அளித்தனா்.