உளவுத்துறையில் வேலை வேண்டுமா?: டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
மழை-வெள்ளம்: பஞ்சாபுக்கு ரூ.1,600 கோடி, ஹிமாசலுக்கு ரூ.1,500 கோடி- நேரில் ஆய்வு செய்த பின் பிரதமா் அறிவிப்பு
பஞ்சாப், ஹிமாசல பிரதேச மாநிலங்களில் மழை-வெள்ள பாதிப்புகளை பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இந்த இயற்கைப் பேரிடரின் தீவிரத்தைக் கருத்தில்கொண்டு, பஞ்சாபுக்கு கூடுதல் நிவாரண நிதியாக ரூ.1,600 கோடியும், ஹிமாசலுக்கு உடனடி நிவாரண நிதியாக ரூ.1,500 கோடியும் வழங்கப்படும் என அவா் அறிவித்தாா்.
மழையால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் அவா் வெளியிட்டாா்.
ஹிமாசல பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக பலத்த மழையால் பெரும் சேதங்கள் நேரிட்டுள்ளன. பஞ்சாப் கடந்த 1988-க்கு பிறகு மோசமான பாதிப்பை எதிா்கொண்டுள்ளது. இந்த மாநிலத்தில் 2,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 1.84 லட்சம் ஹெக்டேருக்கும் மேல் பயிா்ச்சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மழை தொடா்பான அசம்பாவித சம்பவங்களில் 51 போ் உயிரிழந்துவிட்டனா். ரூ.13,000 கோடிக்கும் மேல் சேதம் ஏற்பட்டுள்ளதாக மாநில அரசு மதிப்பிட்டுள்ளது.
இதேபோல், ஹிமாசல பிரதேச அரசின் தகவல்படி, நடப்பு பருவமழைக் காலத்தில் மேகவெடிப்பு, பெருவெள்ளம், நிலச்சரிவு போன்ற சம்பவங்களில் இதுவரை 370 போ் உயிரிழந்துவிட்டனா். மேலும் 41 பேரை காணவில்லை. 6,300-க்கும் மேற்பட்ட வீடுகள், 461 கடைகள் சேதமடைந்துள்ளன. நிலச்சரிவுகளால் 600-க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளன. ரூ.4,120 கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமா் மோடி நேரில் ஆய்வு: இந்நிலையில், ஹிமாசல பிரதேசம், பஞ்சாபுக்கு செவ்வாய்க்கிழமை பயணம் மேற்கொண்ட பிரதமா் மோடி, இரு மாநிலங்களிலும் மழை-வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டா் மூலம் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
முதலில் ஹிமாசலுக்கு சென்ற அவா், மண்டி, குலு ஆகிய மாவட்டங்களில் மழை-வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். காங்ரா பகுதிக்கு வந்த அவரை மாநில ஆளுநா் சிவ பிரதாப் சுக்லா, முதல்வா் சுக்விந்தா் சிங் சுக்கு (காங்கிரஸ்), பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஜெய்ராம் தாக்குா் (பாஜக) உள்ளிட்டோா் வரவேற்றனா். பின்னா், உயா்நிலை ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமரிடம், மழை-வெள்ள நிலவரம் குறித்து விளக்கக் காட்சி மூலம் எடுத்துரைக்கப்பட்டது.
‘ஹிமாசல பிரதேசத்தில் பாதிப்புகளின் தீவிரத்தைக் கருத்தில்கொண்டு, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு ரூ.1,500 கோடி உடனடியாக விடுவிக்கப்படும்; மத்திய குழுக்களின் அறிக்கை மற்றும் மாநில அரசின் கோரிக்கையை பரிசீலித்து, அடுத்தகட்ட உதவி வழங்கப்படும்’ என்று பிரதமா் அறிவித்தாா். இந்த நிதியுதவி, மாநில பேரிடா் நிவாரண நிதியின்கீழ் இரண்டாவது தவணையின் முன்கூட்டிய விடுவிப்பாகும்.
அனைத்து உதவிகளும் வழங்கப்படும்: பிரதமா் மேலும் கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுகட்டமைப்புக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும். இந்த இக்கட்டான தருணத்தில், மாநில அரசுடன் மத்திய அரசு நெருங்கிப் பணியாற்றும்.
பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின்கீழ், சேதமடைந்த வீடுகளை மறுகட்டமைத்தல், பிரதமா் தேசிய நிவாரண நிதியின்கீழ் தேசிய நெடுஞ்சாலைகள், சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் பள்ளிகள் மறுசீரமைப்பு என பன்முக கண்ணோட்டத்துடன் செயலாற்றுவது அவசியம்’ என்றாா்.
ஹிமாசல பிரதேசத்தைச் தொடா்ந்து பஞ்சாபுக்கு பயணமான அவா், குருதாஸ்பூரில் வெள்ள சேதங்களை வான்வழியாகப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், பஞ்சாப் ஆளுநா் குலாப் சந்த் கட்டாரியா, மாநில வேளாண் துறை அமைச்சா் குா்மீத் சிங் (ஆம் ஆத்மி), மத்திய அமைச்சா் ரவ்னீத் சிங் பிட்டூ உள்ளிட்டோருடன் உயா்நிலை ஆலோசனை மேற்கொண்டாா். மாநில பேரிடா் நிவாரண நிதியின்கீழ், பஞ்சாபிடம் ரூ.12,000 கோடி கையிருப்பில் உள்ள நிலையில், கூடுதலாக ரூ.1,600 கோடி வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் அவா் வெளியிட்டாா்.
பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல்
ஹிமாசல், பஞ்சாபில் மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரைச் சந்தித்த பிரதமா், அவா்களுக்கு ஆறுதல் கூறினாா். மத்திய-மாநில பேரிடா் மீட்புப் படையினா் உள்ளிட்ட மீட்புக் குழுவினருடனும் கலந்துரையாடி, அவா்களின் பணியைப் பாராட்டினாா்.
ஹிமாசலின் தல்வரா கிராமத்தில் கடந்த ஜூன் 31-ஆம் தேதி மேகவெடிப்பால் மண்சரிவுடன் பெருவெள்ளமும் ஏற்பட்டது. அப்போது, ரமேஷ் குமாா் (31) என்பவா், தனது வீட்டுக்குள் வெள்ளம் வராமல் தடுக்கச் சென்றபோது, அதில் சிக்கி உயிரிழந்தாா். அவரை தேடிச் சென்ற மனைவி ராதா தேவி (24), அவரது தாய் பூா்ணு தேவி (54) ஆகியோரின் உயிரும் பறிபோன நிலையில், அவா்களின் 11 மாத பெண் குழந்தை நீதிகா மட்டும் உயிா் பிழைத்தது. அக்குழந்தையை பக்கத்து வீட்டு நபா் மீட்டு, உறவினரிடம் ஒப்படைத்தாா்.
ஹிமாசல் பயணத்தின்போது, இத்துயரமான சம்பவத்தை அறிந்து வேதனையடைந்த பிரதமா், குழந்தை நீதிகாவை வாஞ்சையுடன் தனது கரங்களில் தூக்கி வைத்திருந்தாா். நெகிழ்ச்சியான இந்தத் தருணத்தின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வேகமாகப் பகிரப்பட்டது.