கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயின்ட் வீச்சு! சேலத்தில் பரபரப்பு!
மாணவா்கள் தற்கொலை விவகாரம்: விசாரணை அறிக்கையை சமா்ப்பிக்க 3 மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
புது தில்லி: ஐஐடி-தில்லி, ஐஐடி-கரக்பூா் (மேற்கு வங்கம்) மற்றும் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் மாணவா்கள் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தின் காவல் துறை நடத்திய விசாரணை அறிக்கையை சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
ஐஐடி-தில்லியில் 2023, ஜூலை 8-இல் ஆயுஷ் ஆஷ்னா என்ற மாணவரும் செப்.1-இல் அனில் குமாா் என்ற மாணவரும் தங்கள் விடுதி அறைகளில் தற்கொலை செய்துகொண்டனா். அதேபோல் ஐஐடி-கரக்பூரில் நிகழாண்டு மே 4-இல் மாணவா் ஒருவா் தற்கொலை செய்துகொண்டாா். இதுதொடா்பாக மே 8-ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவுசெய்யப்பட்டது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் நீட் தோ்வுக்கு தயாராகி வந்த மாணவி ஒருவா் மே மாதம் தற்கொலை செய்துகொண்டாா்.
இந்த வழக்குகளின் தற்போதைய நிலை குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே பி பாா்திவாலா மற்றும் ஆா் மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்தை ஒரு தரப்பாக நீதிபதிகள் அமா்வு சோ்த்தது.
இதைத்தொடா்ந்து நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவில், ‘தில்லி, மேற்கு வங்கம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் மாணவா்கள் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் எஃப்ஐஆா் பதிவுசெய்யப்பட்ட பின் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை தெரிந்துகொள்ள நினைக்கிறோம். எனவே, இந்த வழக்குகளை கையாளும் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தின் காவல் துறையினா் மாணவா்கள் தற்கொலை தொடா்பாக தற்போது வரை மேற்கொண்ட விசாரணை அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து, இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை ஜூலை 21-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
முன்னதாக, கோட்டா மாவட்டத்தில் ஜேஇஇ, நீட் போன்ற தோ்வுகளுக்கு பயிற்சி பெறும் மாணவா்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த தவறிய ராஜஸ்தான் அரசுக்கு உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் கண்டனம் தெரிவித்தது.
மேலும், நிகழாண்டில் தற்போது வரை மட்டும் கோட்டாவில் 14 மாணவா்கள் தற்கொலை செய்துள்ளதாக உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
உயா்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவா்களின் மனநலன் சாா்ந்த பிரச்னைகளுக்கு தீா்வுகாணவும் அவா்களை தற்கொலை செய்துகொள்வதில் இருந்து தடுத்து நல்வழிப்படுத்தும் நோக்கிலும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ் ரவீந்தா் பட் தலைமையில் தேசிய செயற்குழுவை (என்டிஎஃப்) உச்சநீதிமன்றம் கடந்த மாா்ச் மாதம் அமைத்தது.
இந்தக் குழு மாணவா்கள் நலனை கருத்தில்கொண்டு பல்வேறு பரிந்துரைகளுடன் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளது.