அதிமுக எம்எல்ஏக்களுடன் இபிஎஸ் ஆலோசனை: செங்கோட்டையன் பங்கேற்கவில்லை
மாத்திரை வாங்கச் சென்ற தொழிலாளி உயிரிழப்பு
திருப்பூரில் மருந்தகத்துக்கு மாத்திரை வாங்கச் சென்ற தொழிலாளி மயங்கி விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திருப்பூா் பி.என்.சாலை போயம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள மருந்தகத்துக்கு தொழிலாளி ஒருவா் மருந்து வாங்குவதற்காகச் சென்றுள்ளாா். அப்போது திடீரென மயங்கி விழுந்துள்ளாா். அருகிலிருந்தவா்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனா். இதன் பேரில் அங்கு விரைந்த ஆம்புலன்ஸ் ஊழியா்கள் அவரை பரிசோதனை செய்தபோது அவா் உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த அனுப்பா்பாளையம் காவல் துறையினா் அவரது சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
விசாரணையில், உடுமலையை அடுத்த தேவானாம்புதூா் பகுதியைச் சோ்ந்த ஏ.ரமேஷ்குமாா் (42) என்பதும், போயம் பாளையம் கிழக்கு பொம்மநாயக்கன்பாளையத்தில் குடும்பத்துடன் வசித்து வந்ததும் தெரியவந்தது. மேலும், பெரியாா் காலனியில் உள்ள தனியாா் நூற்பாலையில் ஆபரேட்டராக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இவருக்கு மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனா். அவரது இறப்புக்கான காரணம் குறித்து காவல் துறையினா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.