செய்திகள் :

மாநில சுயாட்சிக்காக குரல் கொடுக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

post image

சென்னை: தன்னிறைவு பெற்ற மாநிலங்களின் முயற்சியால்தான் ஒன்றுபட்ட நாடு வலிமை பெரும். பலவீனமான மாநிலங்களால் நாட்டை உயர்த்த முடியாது. நாட்டின் ஒருமைப்பாட்டின் மீது அக்கறைக் கொண்ட அனைவரும் மாநில சுயாட்சிக்காக குரல் கொடுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை, கலைவாணர் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற மத்திய-மாநில உறவுகள் குறித்த தேசிய கருத்தரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரை ஆற்றினார்.

அப்போது, மாநில சுயாட்சி குறித்த முதல் தேசியக் கருத்தரங்கை தமிழ்நாடு அரசு சார்பில் தொடங்கி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் நான் அடைகிறேன்!

பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழ் மண்ணுக்கு என்று பல சிறப்புகள் இருக்கிறது!

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று வள்ளுவ நீதியை சொல்லும் மண் இது!

“யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று உலகளாவிய சகோதரத்துவத்தை வலியுறுத்திய கணியன் பூங்குன்றனார் வாழ்ந்த மண்! இந்த மண்.

எல்லோரும் சமம் என்ற சமத்துவ எண்ணத்தின் அடிப்படையில், எல்லோருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் - அனைவரும் அனைத்து உரிமைகளும் பெறவேண்டும் - எல்லோரும் அரசுப் பணிகளில் இணையாக பணியாற்ற வேண்டும் என்பதுதான் சமூகநீதிக் கோட்பாட்டுக்கு அடிப்படை!

தமிழ்நாட்டில் சுமார் நூறு ஆண்டுகளாக இட ஒதுக்கீட்டு கொள்கையை பின்பற்றி, பல முற்போக்கான சட்டங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றியிருக்கிறோம்! இதற்கு அடித்தளம் அமைத்தது, திராவிட இயக்கம்! பிட்டி தியாகராயர் - டாக்டர் நடேசனார் - டாக்டர் டி.எம்.நாயர் - உள்ளிட்ட தலைவர்கள்!

இவர்களின் தொடர்ச்சியாக, தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் ஆகிய தலைவர்கள், சமத்துவம், சமூகநீதி, பெண்ணுரிமை உள்ளிட்ட உயர்ந்த கொள்கைகளுக்காக பாடுபட்டார்கள். பேரறிஞர் அண்ணாவும், தலைவர் கலைஞரும் தங்களுடைய ஆட்சிக்காலங்களில் ஏழை எளிய மக்கள் அனைத்து துறைகளிலும் ஏற்றம் பெறுவதற்கு எடுத்துக்காட்டான பல முற்போக்கான சமூக - பொருளாதார நலத்திட்டங்களை நிறைவேற்றினார்கள். இப்படி, தமிழ்நாட்டின் அரசியல் என்பதே, சமூகநீதி அரசியலாகதான் இருக்கிறது!

தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சியுடன் பயன்கள், சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் சென்றடைந்திருக்கிறது. ஐ.நா. மன்றத்தின் மானுட மேம்பாட்டுக் குறியீடுகளான தனிநபர் வருமானம், கல்வி, பொது சுகாதாரம், பெண்ணுரிமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற குறியீடுகளில் இந்திய மாநிலங்களுடன் ஒப்பிட்டால், தமிழ்நாடு பல துறைகளில் முதன்மை மாநிலமாக தொடர்ந்து திகழ்ந்து வருகிறது.

மத்திய அரசு விதிக்கின்ற நேர்முக வரிகளிலும், ஜி.எஸ்.டி. வரிகளிலும் மத்திய அரசுக்கு அதிக வருமானத்தை ஈட்டித் தருகின்ற மாநிலமாகவும் தமிழ்நாடு இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு தருகின்ற நிதிப் பகிர்வுத் தொகையில், மாநிலம் அளிக்கின்ற வரி வருமானத்துக்கு ஏற்ப, ஒன்றிய அரசு தமிழ்நாட்டு அரசுக்கு உரிய நிதிப் பங்கை வழங்காமல், குறுகிய அரசியல் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.

பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் காட்டிய வழியில் சிறந்த பல சமூகப் பொருளாதார திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றி, கடந்த நான்கரை ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியை தமிழ்நாட்டு மக்களுக்கு நாம் வழங்கி வருகிறோம். பல்வேறு நெருக்கடிகளையும் மீறி, போராடி தமிழ்நாட்டை உயர்த்தி வருகிறோம்.

* 1967-ல் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதும் தன்னுடைய சட்டப்பேரவை உரையில், “மாநிலங்கள் உரிமை பெற அரசமைப்புச் சட்டத்தில் மறு ஆய்வு தேவையானது” என்று குறிப்பிட்டார்.

* 1969-ஆம் ஆண்டு முதல்வர் கலைஞர் நீதியரசர் ராஜமன்னார் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார்.

* மத்திய – மாநில உறவுகளைச் சீராய்வு செய்து 1971, மே 27-ல் ராஜமன்னார் குழு தனது வரலாற்றுச் சிறப்புமிக்க அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் அளித்தது.

* அந்த அறிக்கையை அடிப்படையாக வைத்து, 1974 ஏப்ரல் 14-ஆம் நாள் மாநில சுயாட்சி தீர்மானத்தை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றினார் முதல்வராக இருந்த கலைஞர். அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு, ஒரு மடல் எழுதி, மாநில சுயாட்சி தீர்மானத்தையும் இணைத்து, மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

* இன்றைக்கும் ராஜமன்னார் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு பரிந்துரைகள் மிகவும் போற்றத்தக்கதாகவும், நடைமுறைப்படுத்த வேண்டிய நிலையிலும் இருக்கிறது.

* தமிழ்நாடு, மேற்கு வங்கம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, பஞ்சாப், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜக அல்லாத கட்சிகளின் தலைமையில், ஆட்சி நடைபெறுகிறது.

இந்தப் பட்டியலில் காஷ்மீரும் ஒரு மாநிலமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு அரசமைப்புச் சட்ட விதிகளை மீறி, தன்னிச்சையாக, காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு, ஆளுநர் ஆட்சிக்காலத்தில் காஷ்மீர் மாநிலத்தை மத்திய அரசின் நேரடியான ஆட்சிக்கு உட்பட்ட ஒரு பகுதியாக மாற்றி அறிவித்தார்கள். இத்தகைய ஜனநாயக விரோத, கூட்டாட்சியியலுக்கு எதிரான நடவடிக்கைளை திமுக, எங்களோடு இணைந்திருக்கின்ற காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முசுலீம் லீக் என்று அனைத்து கட்சிகளும் இணைந்து கண்டித்தோம்.

இது போன்ற நிலை தொடரக்கூடாது; மாநிலங்களுடைய உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படக்கூடாது என்ற உணர்வில்தான், மீண்டும், கடந்த 50 ஆண்டுகளில் கூட்டாட்சிக்கு எதிராக நடைபெற்ற நிகழ்வுகளை ஆய்ந்து, உரிய அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை மேற்கொள்வதற்கு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் ஒரு உயர்நிலைக் குழுவை நியமித்திருக்கிறோம்.

1983-இல் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற தென்னிந்திய மாநிலங்களின் முதல்வர்கள் மாநாட்டை தொடர்ந்து, அன்றைய மத்திய அரசு, உச்சநீதிமன்ற மேனாள் நீதியரசர் திரு.சர்க்காரியா தலைமையில் 1983-இல் ஒரு குழு அமைத்தது.

ரத்தக் கொதிப்பும்- ரத்தச் சோகையும்

நீதியரசர் சர்க்காரியா குழு, 1988-ல் தன்னுடைய அறிக்கையை வெளியிட்டது. இந்த ஆணையத்தின் அறிக்கையில் ஒரே ஒரு இடத்தில் மாநிலங்களுக்கு ஆதரவாக என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால்; இந்தியாவில் பொதுவாக பெருமளவில் அதிகாரக் குவிப்பு நடைபெற்று வருகிறது. இதைத் தடுப்பதற்குப் பயனுள்ள வகையிலும், மனசாட்சியுடனும் எல்லா நேரங்களிலும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அளவுக்கு மீறிய அதிகாரக் குவியல்களால் மத்திய அரசுக்கு ரத்தக் கொதிப்பும், மாநில அரசுகளுக்கு இரத்தச் சோகையும் ஏற்பட்டுள்ளது.

இதன் விளைவு என்னவெனில், நோயுற்ற தன்மையும், திறமையின்மையும்தான் இதன் வெளிப்பாடாக உள்ளது. உண்மையில் அதிகாரக்குவியல் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக அதிகப்படுத்துகிறது என்று அந்த அறிக்கையில் இருக்கிறது. சர்க்காரியா ஆணையம் குறிப்பிட்ட இந்தக் கருத்துக்கு ஏற்ப மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் வகையில், இந்த ஆணையம் அரசமைப்புச் சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதற்கு உரிய பரிந்துரைகளை செய்யவில்லை என்பதையும், நான் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

சர்க்காரியா ஆணையத்தின் அறிக்கை வெளிவந்த பிறகும், நாடாளுமன்றத்தில் பல சட்டங்களின் வழியாகவும், அரசமைப்புச் சட்டத்திருத்தங்கள் வழியாகவும், மத்திய அரசிடம் பல அதிகாரங்கள் தொடர்ந்து குவிக்கப்பட்டு வருகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், மாநிலங்களின் உரிமைகளை நிலைநிறுத்த ஆய்வுக் குழு அமைக்கவேண்டும் என்று திமுக வலியுறுத்தியதை தொடர்ந்து – 2007 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதியரசர் புஞ்சி தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் பரிந்துரைகளில் மிக முக்கியமானது ஆளுநரை எப்படி நியமனம் செய்யவேண்டும் என்பதுதான். கட்சி சார்பற்ற முறையில், நடுநிலையாக செயல்படக்கூடிய சிறந்தவர்களாக தேர்ந்தெடுத்து அந்தந்த மாநில முதல்வர்களிடம் கலந்தாலோசித்து மத்திய அரசு நியமனம் செய்யவேண்டும் என்று “புஞ்சி ஆணையம்“ தனது பரிந்துரையை வழங்கியது.

இந்த ஒரு ஆலோசனையைக் கூட மத்திய அரசு இன்றுவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்று தமிழ்நாட்டில் தற்போதைய ஆளுநரின் செயல்பாடுகளை வைத்தே நாம் தெரிந்து கொள்ள முடியும். இதுபோன்ற எண்ணற்ற சட்டக்குறுக்கீடுகள், நிருவாகக் குறுக்கீடுகள் வழியாகவும், பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளுக்குத் தொடர்ந்து தொல்லை தரும் வகையில் பல தடைகளை மத்திய அரசு ஏற்படுத்தி வருகிறது.

இரட்டை இலக்க வளர்ச்சியை அடைந்திருக்கிறோம்

நிதி ஆணையங்கள் சுதந்திரமாக செயல்படுவதையும் மத்திய அரசு தடுக்கின்றது. மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய உரிய, நியாயமான நிதி பங்கீட்டை மறுக்கின்றது. இதையெல்லாம் மீறி, கடந்த 4 ஆண்டுகளாக திராவிட மாடல் அரசு, பல சிறந்த திட்டங்களை வகுத்து, நிறைவேற்றி வருகிறது. திப்பற்றாக்குறை காலத்தில்கூட சிறந்த முறையில் நிதி மேலாண்மை செய்து 2024-25-ஆம் ஆண்டில், 11.19 விழுக்காடு எனும் இரட்டை இலக்க வளர்ச்சியை 14 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் அடைந்திருக்கிறோம்.

நடுநிலை தவறாத நல்லெண்ணம் கொண்ட பல அறிஞர்களும், பொதுநல நோக்கர்களும், திராவிட மாடல் அரசின் சமூக நீதித் திட்டங்களை பாராட்டி வரவேற்கிறார்கள். இந்தி மொழியை திணிப்பதில் ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனாலும், பல்வேறு மொழிப் போராட்டக் களங்களை எதிர்கொண்டு, இந்தித் திணிப்பை தமிழ்நாடு முறியடித்திருக்கிறது. ஏராளமான அரசியல் தலைவர்கள், தமிழ் உணர்வாளர்கள் – மாணவர்கள் போராடி, கட்டாய இந்தியை தடுத்தார்கள்! அதனால்தான், 1968-லேயே இருமொழிக் கொள்கையை முதல்லவராக இருந்த பேரறிஞர் அண்ணா சட்டப்பேரவையில் தீர்மானமாகவே நிறைவேற்றினார்.

தமிழ்நாட்டில் இருந்து எழுப்பப்படுகின்ற இந்தி ஆதிக்க எதிர்ப்பு, மாநில உரிமை முழக்கத்தை இப்போது இந்தியாவின் பல மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்திருக்கிறார்கள். கர்நாடகா, மேற்கு வங்க மாநிலங்களில் இரு மொழிக் கொள்கையை ஆதரித்து, குரல்கள் எழுப்புகிறார்கள்.

2025 இல் மகாராஷ்டிரம் மாநிலத்தில் உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே இணைந்து இந்தி எதிர்ப்புப் பேரணியை நடத்தியதும், பாஜக, ஏக்னாத் ஷிண்டே கூட்டணி ஆட்சியின் பாஜக முதல்வர் பட்நாவிஸ் மராட்டிய மாநிலத்தில் இந்தி கட்டாயம் கிடையாது என்று அறிவித்தார். இது இந்திய அளவில் நடந்து கொண்டிருக்கின்ற மாபெரும் மாற்றம் இது. மாநில உரிமைகளுக்காக தமிழ்நாடு தொடர்ந்து போராடி வருகிறது. இதற்காக திராவிட இயக்க சிந்தனையாளர்களான முரசொலி மாறன், கு.ச.ஆனந்தன், ஆலடி அருணா ஆகியோர் சிறந்த ஆய்வு நூல்களை எழுதியிருக்கிறார்கள்.

திமுக மக்கள் மன்றத்திலும், சட்டப்பேரவையிலும் மாநில உரிமைகளை வென்றெடுக்க, அனைத்துவிதமான ஆக்கபூர்வமான, ஜனநாயக நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. எனவே, மாநிலங்கள் சுயாட்சி பெற, தமிழ்நாடு அரசு ஏற்று நடத்தும் முதல் தேசிய அளவிலான கருத்தரங்கில் உரையாற்ற இருக்கக்கூடிய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர்களும், சட்ட வல்லுநர்களும், பேராசிரியர்களும் - மத்திய - மாநில உறவுகள் மேம்பட தங்களுடைய சீரிய கருத்துகளை – வழங்கவேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

இங்கே எனக்கு முன்னால் நம்முடைய முன்னாள் நீதியரசர் ஜஸ்டி செலமேஸ்வர் சிறப்பாக உரையாற்றி இருக்கிறார்கள். தற்போதுள்ள நீதித்துறை நடைமுறைகள், அரசுத் துறைகளின் நடைமுறைகளில் தன்னுடைய அனுபவத்திலிருந்து கருத்துகளை எல்லாம் அவர் பகிர்ந்திருக்கிறார். அவருடைய உரை அனைவருக்கும் புதிய கோணத்திலான சிந்தனையை நிச்சயமாக தூண்டியிருக்கும். அதுபோல இன்று எல்லோருடைய உரையும் அமையும் என்று நம்புகிறேன்.

மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி

மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற கொள்கை திட்டம்தான் இந்தியாவின் பன்முகத் தன்மையையும், இந்தியாவின் ஒருமைப்பாட்டையும் மேலும் வலிமைப்படுத்தும்! அதற்கு, நம்முடைய உயர்நிலைக்குழு சிறந்த முறையில் பணியாற்றி வருகிறது. அதற்கு உதாரணம் இந்தக் குழுவின் தலைவர் நீதியரசர் குரியன் பேசும்போது, ஒரே வரியில் சிறப்பாகச் சொன்னார் – பலரும் சொல்லும் தேசம் முதன்மை என்பதைவிட தேசத்தை உருவாக்கிய அரசமைப்பு சட்டமே முதன்மை என்பதை தெளிவாக சொல்லிவிட்டார்.

புதிய வலிமையான இந்தியா உருவாக வழிவகுக்கும்

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க குழுவில் அவருடன் இணைந்து பணியாற்றும் அசோக் வர்தன் ஷெட்டி, டாக்டர் நாகநாதனுக்கு என்னுடைய பாராட்டுக்களை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்தக் குழு அளிக்கக்கூடிய பரிந்துரைகள், மாநிலங்கள் தன்னுரிமை பெற்று, ஒரு புதிய வலிமையான இந்தியா உருவாக வழிவகுக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

மாநில சுயாட்சிக் கொள்கைக்கு குரல் கொடுக்க வேண்டும்

தன்னிறைவு பெற்ற மாநிலங்களின் முயற்சியால்தான் ஒன்றுபட்ட இந்தியா வலிமை பெறும். பலவீனமான மாநிலங்களால் இந்தியாவை உயர்த்த முடியாது. எனவே, இந்திய ஒருமைப்பாட்டில் உண்மையானஅக்கறை கொண்ட எல்லோரும் மாநில சுயாட்சிக் கொள்கைக்கு குரல் கொடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாடு அரசு அமைத்த குழு போல இந்தியாவில் இருக்கின்ற அனைத்து மாநிலங்களும் இதுபோல குழு அமைத்து, மாநில உரிமை முழக்கத்தை முன்னெடுக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் நான் வலியுறுத்துகிறேன்.

“மாநில சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி“ எனும் விழுமியங்கள் கொண்டதாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தம் பெற நாம் அனைத்து வகையிலும் முயற்சி செய்வோம். தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! என ஸ்டாலின் கூறினார்.

தமிழக முதல்வா் மீண்டும் ஸ்டாலின்தான்: அமைச்சர் கே.என். நேரு திட்டவட்டம்

திருநெல்வேலி: தமிழக முதல்வா் மீண்டும் ஸ்டாலின்தான் என திட்டவட்டமாகத் தெரிவித்த தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, "விவசாயத்தில் ஒரு பயிரை வேரோடு பிடுங்கி நட்டால், அது முன்பை விட பெரி... மேலும் பார்க்க

இணையப் பாதுகாப்பு, நெறிமுறை ஹேக்கிங் படிப்பில் சேருவது எப்படி?

10+2, டிப்ளமோ, இன்ஜினியரிங் மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் சைபர் பாதுகாப்புத் துறையில் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளவதற்கு ஒரு அருமையான வாய்ப்பாக, இணையப் பாதுகாப்பு, நெறிமுறை ஹேக்கிங் படிப்பு... மேலும் பார்க்க

சுதாகர் ரெட்டி மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி மறைவையொட்டி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதள பக்கத்தில் வெளிய... மேலும் பார்க்க

மோடி அமைச்சரவையில் குற்றப் பின்னணி கொண்ட 39% பேர் மீது 130-ஆவது சட்டப் பிரிவு பாயுமா?

மோடியின் அமைச்சரவையில்39சதவிகிதம் பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள். இவர்கள் மீதெல்லாம்130-ஆவது சட்டப் பிரிவு பாயுமா? என கேள்வி எழுப்பியுள்ள திமுக எம்.பி. ஆ.ராசா, அமித்ஷாவின் மிரட்டல் உருட்டல்களுக்கு எ... மேலும் பார்க்க

மதுபோதையில் கிணற்றில் குதித்து இளைஞர் தற்கொலை: காப்பாற்ற முயன்றவரும் நீரில் மூழ்கி பலி

அவிநாசி: அவிநாசி அருகே மது போதையில் இளைஞர் கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்துகொண்டார். அப்போது அவரை காப்பாற்ற சென்ற இளைஞரும் கிணற்று நீரிழ் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ... மேலும் பார்க்க

தங்கம் விலை அதிரடியாக உயர்வு: எவ்வளவு?

சென்னையில் தங்கம், வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சனிக்கிழமை தங்கம் பவுனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.75,520-க்கு விற்பனையாகிறது.தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வதும், அதனைத் தொடர்ந்து சில நாள... மேலும் பார்க்க