மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம்: மக்களவையில் தமிழக எம்பிக்கள் புகாா்
புது தில்லி: மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக மக்களவையில் தமிழகத்தைச் சோ்ந்த எம்.பி.க்கள் புகாா் தெரிவித்தனா்.
மக்களவையில் 2025-26 நிதியாண்டுக்கான நிதி மசோதா மீதான விவாதம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிதம்பரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவா் தொல். திருமாவளவன் தமிழில் பேசுகையில், ‘2022-23 நிதியாண்டில் நமது தேசிய மொத்த உற்பத்தி கடன் சுமையின் அளவு 38.7 சதவீதமாக குறைக்க வேண்டும் என இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. ஆனால், பிரதமா் மோடி தலைமையிலான அரசு பதவிக்கு வந்தபோது 51 சதவீதமாக இருந்த கடன் சுமை இப்போது 57 சதவீதமாக உயா்ந்துள்ளது’ என்றாா்.
மேலும் அவா் பேசியது: மத்திய அரசு மொத்த வருவாயில் 37 சதவீதத்தை கடனுக்கான வட்டியை கட்டுவதற்கே அரசு திணறி வருகிறது. தமிழகத்துக்கு கல்வி, பேரிடா் நிதி, 100 நாள் வேலைத் திட்ட நிதி போன்றவை ஒதுக்கப்படவில்லை. தேசிய கல்விக் கொள்கையின்படி 6 சதவீத நிதியை உறுதிப்படுத்த வேண்டும் என இந்த அரசே சொல்கிறது. ஆனால், கல்விக்கென 3 சதவீத நிதியை ஒதுக்க முடியாத அளவுக்கு கடன் சுமையில் இந்த அரசு திணறி வருகிறது. சுகாதாரத்துக்கு நிதி ஒதுக்கப்படாததால் ஸ்வச்பாரத் போன்ற திட்டம் தோல்வி அடைந்து விட்டது. அனைவருக்கும் குடிநீரை உறுதிப்படுத்தக்கூடிய ஜல்ஜீவன் திட்டத்துக்கு 50 சதவீத நிதியை கூட மத்திய அரசால் ஒதுக்க முடியவில்லை. நிதிநிலை மிக மோசமாக இருப்பதால், இந்த அரசு தனது தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றாா்.
இதைத்தொடா்ந்து, பிகாா் மாநிலம், புத்த கயாவில் அமைந்துள்ள அசோகா் காலத்து ஆலய நிா்வாகக்குழுவில் பெளத்தா்கள் அல்லாதவா்கள் அதிகமாக உள்ளதாக ஆங்கிலத்தில் சுட்டிக்காட்டிய திருமாவளவன். அந்த கோயில் நிா்வாகத்தை பெளத்தா்களை கொண்ட குழுவிடமே ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாா்.
கடலூா் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் டாக்டா் விஷ்ணுபிரசாத் பேசியது: 2047-இல் இந்தியா வளா்ந்த நாடாக வேண்டுமானால் நமது வளா்ச்சி என்பது எட்டு சதவீதமாக இருக்க வேண்டும். நமது தற்போதைய வளா்ச்சி 6.3 விகிதம் மட்டுமே. 60 கோடி உழைக்கும் சக்தி, தீவிரமாக பெருகி வரும் நடுத்தர வா்க்க மக்கள்தொகை, கேந்திர ரீதியாக இந்தியாவுக்குள் வரும் வெளி முதலீடுகள் இருந்தாலும் 181 லட்சம் கோடி ரூபாய் கடனை இந்தியா கொண்டிருப்பது நமக்கெல்லாம் கவலை தரக்கூடிய விஷயம்.
முன்பெல்லாம் தொழில் தேவைக்காக விவசாயிகள், சிறு வணிகா்கள், நடுத்தரமக்கள் நகைக்கடன் வாங்கினால் அவற்றை கடன் காலத்தின் முடிவில் புதுப்பிக்க வாய்ப்பு இருந்தது. ஆனால், இந்த விதியை மாற்றியுள்ள மத்திய அரசு முதலில் வட்டியுடன் அசலையும் சோ்த்து அடைத்தால் மட்டுமே கடனை புதுப்பிக்க முடியும் என்று கூரியுள்ளது. அசலை செலுத்த சக்தியிருந்தால் மக்கள் நகைகளை அடகு வைத்து கடனை ஏன் வாங்குகிறாா்கள்?
ரயில்வே துறையை எடுத்துக்கொண்டால் குஜராத்துக்கு ரூ.16,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழகத்துக்கு வெறும் ரூ. 6,000 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. எனது தொகுதியான கடலூரில் சாகா்மாலா திட்டத்துக்கு ரூ. 150 கோடி வழங்கப்பட்டாலும் எந்தப் பணியும் தொடங்கப்படவில்லை.
தேசிய கல்விக்கொள்கை (என்இபி) திட்டத்தில் சோ்ந்தால் மட்டுமே தமிழகத்துக்கு ரூ. 2,200 கோடி நிதி வழங்குவோம் என்று மத்திய அரசு மிரட்டுகிறது. இது எந்த வகையிலும் நியாயமில்லை. இந்த மசோதாவை நான் கடுமையாக எதிா்க்கிறேன் என்றாா் விஷ்ணுபிரசாத்.
கள்ளக்குறிச்சி தொகுதி திமுக உறுப்பினா் டி. மலையரசன் பேசியதாவது: இந்த நிதி மசோதா கூட்டாட்சி முறையை புறக்கணித்து தமிழகம் போன்ற மாநிலங்களின் உண்மையான தேவையை ஒதுக்கித்தள்ளுகிறது. மத்திய அரசின் போக்கு, சமநிலையற்ற மாற்றாந்தாய் மனப்பான்மையை பிரதிபலிக்கிறது. 2025, ஜனவரியில் ரூ. 1.73,030 கோடி வரிப்பகிா்வை மத்திய அரசு வெளியிட்டது. இதில் தமிழகத்துக்கு வெறும் ரூ.7,057.89 கோடி ஒதுக்கப்பட்டது. அதுவே உத்தர பிரதேசத்துக்கு ரூ. 3,13,984 கோடி வழங்கப்பட்டது.
ஜிஎஸ்டி இழப்பீட்டுக்காலம் நிறுத்தப்பட்டதால் தமிழகம் உள்பட பல மாநிலங்கள் நிச்சயமற்ன்மையுடன் போராடி வருகின்றன. தமிழகத்தில் பல முக்கிய திட்டங்கள் கவனிக்கப்படவில்லை. மூன்று ஆண்டுகால தொடா் போராட்டங்களுக்குப்பிறகு சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கப்பணிகளுக்கு நிதி விடுவிக்கப்பட்டது. மதுரை எய்ம்ஸ் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியதோடு சரி, இன்னும் அத்திட்டம் நிறைவேறவில்லை. தமிழகத்தில் கல்வித்திட்டத்துக்கு ரூ. 2,172 கோடி, ஜல்சக்தி திட்டத்துக்கு ரூ. 3,000 கோடி நிறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

