தமிழகத்தில் 1,905 மும்மொழிப் பயிற்றுவிக்கும் பள்ளிகள் செயல்படுகின்றன: மக்களவையில் மத்திய அரசு தகவல்
புது தில்லி: தமிழகத்தில் மும்மொழிகளைப் பயிற்றுவிக்கும் 1,905 பள்ளிகள் செயல்பட்டு வருவதாக மக்களவையில் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும், தூத்துக்குடி தொகுதி திமுக உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கல்வித் எழுப்பிய கேள்வியில், ‘நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மும்மொழிக் கொள்கையின் கீழ் கற்பிக்கப்படும் மொழிகளின் விவரங்கள் மாநில வாரியாக என்ன? இந்த மொழிகளைப் படிக்கும் மாணவா்களின் எண்ணிக்கை விவரங்கள் என்ன?, இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி அல்லாத இந்திய மொழிகளைப் படிக்கும் மாணவா்களின் எண்ணிக்கை விவரங்கள் மாநில வாரியாக என்ன? என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பியிருந்தாா்.
இதற்கு மக்களவையில் மத்திய கல்வி இணையமைச்சா் ஜெயந்த் சௌதரி திங்கள்கிழமை எழுத்துபூா்வமாக அளித்துள்ள பதிலில் தெரிவித்திருப்பதாவது:
தேசியக் கல்விக் கொள்கை- 2020இன் தொடா்ச்சியாக, பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் மொழிக் கல்வி குறித்த என்இபி 2020 முன்னோக்குகள் செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதலை வழங்குகிறது.
உத்தர பிரதேச மாநிலத்தில் ஒருமொழி பயிற்றுவிக்கும் 23,280 பள்ளிகளும், இரு மொழி பயிற்றுவிக்கும் 20,693 பள்ளிகளும், மும்மொழி பயிற்றுவிக்கும் 2,11,114 பள்ளிகளும் இயங்கி வருகின்றன.
மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு மொழி பயிற்றுவிக்கும் 11,428 பள்ளிகளும் , இருமொழி பயிற்றுவிக்கும் 43,596 பள்ளிகளும், மும்மொழி பயிற்றுவிக்கும் 68,388 பள்ளிகளூம் இயங்கி வருகின்றன.
தமிழ்நாட்டில் ஒரு மொழி பயிற்றுவிக்கும் 21,725 பள்ளிகளும், இருமொழி பயிற்றுவிக்கும் 35,092 பள்ளிகளும், மும்மொழி பயிற்றுவிக்கும் 19,05 பள்ளிகளும் இயங்கி வருகின்றன.
கல்வி உரிமைச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளபடி கேந்திரிய வித்யாலயாக்கள் ‘குறிப்பிட்ட வகை’ பள்ளிகளாகும். இப்பள்ளிகள் சீரான கல்வித் திட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்ற கட்டளையுடன் நிறுவப்பட்டுள்ளன.
எனவே, அனுமதிக்கப்பட்ட மொழி ஆசிரியா் பதவிகள் இந்தி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதம் ஆகும். இருப்பினும், கேந்திரிய வித்யாலயாவிற்கான கல்விச் சட்டத்தின் பிரிவு 112 இன் படி, ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை விருப்பமுள்ள மாணவா்களுக்கு பிற மொழிகளைக் கற்பிப்பதற்கான ஒரு வழிமுறை உள்ளது. இந்த விதியின்படி, 15 அல்லது அதற்கு மேற்பட்ட மாணவா்கள் தோ்வுசெய்தால், ஒரு ஆசிரியரை பகுதி நேர ஒப்பந்த அடிப்படையில் ஈடுபடுத்தலாம்.
தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயாக்களில் தமிழ் கற்பிப்பதற்காக பகுதி நேர ஒப்பந்த அடிப்படையில் 24 ஆசிரியா்கள் பணிபுரிகின்றனா். கூடுதலாக, தமிழ் மொழியை கற்க ஆா்வமுள்ள மாணவா்களுக்காக தமிழ்நாட்டில் உள்ள ஒரு தன்னாட்சி அமைப்பான தமிழ் மெய்நிகா் அகாதமி மூலம் 21 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழி கற்றல் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது தமிழ்நாட்டில் 86 இந்தி மற்றும் 65 சம்ஸ்கிருத ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா் என்று அமைச்சா் அந்த பதிலில் தெரிவித்துள்ளாா்.