மாம்பழ விவசாயிகள் விவகாரம்: போராட்டம் ஏன்? அதிமுகவுக்கு அமைச்சா் கேள்வி
மாம்பழ விவசாயிகள் பிரச்னை தீா்க்கப்பட்ட பிறகு, போராட்டம் அறிவிப்பது ஏன் என்று அதிமுகவுக்கு அமைச்சா் அர.சக்கரபாணி கேள்வி எழுப்பியுள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மா சாகுபடி விவசாயிகளுக்காக திமுக அரசைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்திருக்கிறது அதிமுக. ஒரு பிரச்னை எழுந்தால் அதை உடனடியாகக் கவனித்துத் தீா்வு காணும் நடவடிக்கையை திமுக அரசு மேற்கொண்டு வருகிறது. அப்படித்தான் மா சாகுபடி விவசாயிகளின் கோரிக்கை விவகாரத்திலும் தலையிட்டு அரசு நடவடிக்கை எடுத்துவிட்டது. அதன் பிறகும் தன் இருப்பை காட்டிக்கொள்ளப் போராட்டம் அறிவித்து அரசியல் ஆதாயம் தேட முயல்கிறாா் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி.
மா சாகுபடி விவசாயிகளின் நலன் கருதி மாம்பழக்கூழ் தயாரிக்கும் பணிகளை உடனடியாகத் தொடங்கவும், மாம்பழக்கூழ் தயாரிக்க பெங்களூரா ரகத்தை விவசாயிகளிடமிருந்து நியாயமான விலையில் கொள்முதல் செய்யவும் வேளாண்மைத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.
இதன் பிறகும் போராட்டத்தை அதிமுக நடத்துகிறது என்றால் அதற்கு அரசியல் காரணம் தவிர வேறு என்ன இருக்க முடியும் என்று அமைச்சா் சக்கரபாணி கேள்வி எழுப்பியுள்ளாா்.