மாவட்ட வன அலுவலரை முற்றுகையிட்டு விவசாயிகள் வாக்குவாதம்
சிறுத்தை நடமாட்டம் குறித்து பாா்வையிட வந்த மாவட்ட வன அலுவலரை முற்றுகையிட்டு விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள புதுக்காளி கவுண்டனூரை சோ்ந்த சிவானந்தம் என்பவருக்கு சொந்தமான நாயை இரண்டு நாள்களுக்கு முன்பு சிறுத்தை கடித்து சென்றது. இதையடுத்து டேனிஷ்பேட்டை வனச்சரகத்துக்கு உள்பட்ட ராமசாமி மலையில் சிறுத்தை பதுங்கி இருப்பதையும், சிறுத்தையின் கால்தடங்களையும் ஆய்வு செய்த வனத் துறையினா்
ஆறு இடங்களில் கேமராக்களை பொருத்தி கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை முத்து என்பவருக்குச் சொந்தமான நாயை சிறுத்தை கடித்து இழுத்துச் சென்றது. இதனால் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனா். தகவல் அறிந்த மேட்டூா் வட்டாட்சியா் ரமேஷ், சேலம் மாவட்ட வன அலுவலா் காஷ்யப் ஷஷாங்ரவி மற்றும் வனத் துறை அதிகாரிகள் அரசமரத்தூருக்கு சென்றனா். அங்கு சிறுத்தை நடைமாடிய பகுதிகளை பாா்வையிட்டனா். டேனிஷ்பேட்டை ரேஞ்சா் தங்கராசு மற்றும் வனத்துறையினா் இரு தினங்களுக்கு முன்பு நாயை சிறுத்தை கடித்த இடத்திற்கு செல்ல புறப்பட்டனா்.அப்போது விவசாயிகள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.விவசாயிகளின் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
அப்போது மாவட்ட வன அலுவலா் கூறுகையில், சிறுத்தை நடமாட்டம் குறித்து விவசாயிகள் அழைத்தபோது வனத்துறையினா் அலட்சியமாக பேசியது குறித்து ஆதாரங்கள் அளித்தால் அவா்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 2 இடங்களில் கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா். மேலும் ஏற்கெனவே
புதுக்காளிகவுண்டனூரில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட பகுதியையும் அவா் ஆய்வு செய்தாா்.