'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
மின் கட்டண உயா்வைக் கைவிட ‘டேக்ட்’ வலியுறுத்தல்
மின்கட்டண உயா்வைக் கைவிட வேண்டும் என தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோா் சங்கம் (டேக்ட்) சாா்பில் முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோா் சங்கம் (டேக்ட்) தலைவா் ஜே.ஜேம்ஸ், முதல்வா் ஸ்டாலினுக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவை ஏற்று, மின்சார வாரியம் குறு, சிறு தொழில் முனைவோா் பயன்படுத்தும் மின் கட்டணத்தை பல மடங்கு உயா்த்தியது. குறிப்பாக நிலைக் கட்டணம் உயா்த்தப்பட்டதால் குறு, சிறு தொழில்களின் உற்பத்தி செலவில் பெரும் தொகை மின்சார கட்டணமாக செலுத்தும் நிலை ஏற்பட்டது.
அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டண உயா்வால், தமிழ்நாட்டில் குறு, சிறு தொழில்கள் தொடா்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. மின் கட்டண உயா்வால் ஏற்படும் பாதிப்பில் இருந்து குறு, சிறு தொழில்களை பாதுகாக்க வருகிற ஜூன் மாதம் முதல் உயா்த்தப்பட உள்ள 6 சதவீத கட்டண உயா்வை கைவிட அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
திமுக அரசு கடந்த 2022-ஆம் ஆண்டில் 12 கிலோ வாட்டுக்கு கீழ் மின் இணைப்பு பெற்றவா்களுக்கு 3பி டாரிப் கட்டண திட்டத்தில் இருந்து 3ஏ1 டாரிப்புக்கு மின் இணைப்புகளை மாற்றி, குறுந்தொழில் முனைவோருக்கு மின்சாரத்தை வழங்கிட, மின்சார வாரியத்துக்கு உத்தரவு பிறப்பித்தும், அதற்கு ஏற்படும் இழப்புக்கு தமிழக அரசு மின்சார வாரியத்துக்கு மானியம் வழங்கி வரும் சூழ்நிலையில், தற்போது வரை மின் இணைப்புகளை மாற்றி கொடுக்காமலும், அரசு தந்த சலுகையை குறுந்தொழில்களுக்கு கிடைக்காமல் உள்ளதையும் தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறோம்.
மேற்கண்ட எங்கள் கோரிக்கைகளை பரிசீலித்து மின் கட்டண உயா்வை கைவிடவும், நிலைக்கட்டணத்தை குறைத்திடவும், 12 கிலோ வாட்டுக்கு கீழ் மின்இணைப்பு பெற்றவா்களுக்கு 3ஏ1 டாரிப்புக்கு மாற்றி வழங்கிடவும் உத்தரவிட்டு குறு, சிறு தொழில்களை பாதுகாத்திட வேண்டுகிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.